சென்னை: கோயில்கள் சார்பில் நடத்தப்படும் முழுநேர, பகுதி நேர பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான மாதாந்திர ஊக்கத் தொகை உயர்த்தி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசாரணை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்கள் சார்பில் அர்ச்சகர், ஓதுவார், தவில் மற்றும் நாதஸ்வரம், பிரபந்த விண்ணப்பர், வேத ஆகம பாடசாலைகள் என 15 பயிற்சிப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு கடந்த ஜூன் மாதம் முதல் திருக்கோயில்கள் சார்பில் நடத்தப்படும் அனைத்துப் பயிற்சி பள்ளிகளில் பயிலும் முழு நேர பயிற்சி மாணவர்களுக்கு பயிற்சி காலத்தில் தற்போது மாதந்தோறும் வழங்கப்பட்டு வரும் ஊக்கத் தொகை ரூ.3,000லிருந்து ரூ.4,000 ஆகவும், பகுதி நேர பயிற்சிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கான ஊக்கத் தொகை ரூ.1,500லிருந்து ரூ.2,000 ஆகவும் உயர்த்தி வழங்க நேற்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.