சென்னை: உயர் நீதிமன்ற உத்தரவின்படி தமிழகத்தில் எத்தனை கோயில்களில் சிலைகள் பாதுகாப்புக்காக ஸ்ட்ராங்க் ரூம்கள் கட்டப்பட்டுள்ளன என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கோயில்கள் பாதுகாப்பு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து 75 உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவில், கோயில் சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங்க் ரூம்கள் கட்டப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக விசாரிக்க நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, 1,824 கோயில்களில் ஸ்ட்ராங்க் ரூம்கள் கட்ட அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. 263 கோயில்களில் ஸ்ட்ராங்க் ரூம்கள் கட்டப்பட்டு விட்டதாகவும், இந்து சமய அறநிலையத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, எத்தனை கோயில்களில் ஸ்ட்ராங்க் ரூம்கள் கட்டப்பட்டுள்ளன. இன்னும் எத்தனை கோயில்களில் ஸ்ட்ராங்க் ரூம்கள் கட்டப்பட வேண்டியுள்ளது. அதற்கு எவ்வளவு காலமாகும் என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு அறநிலையத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.