‘‘தே னிக்காரர் செய்வதறியாது தவித்து வருகிறாராமே.. என்ன காரணம்..’’ என கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடந்த 2019ம் ஆண்டு எம்பி தேர்தலில் ஹனீபி தொகுதியில் இலைக்கட்சி சார்பில் தேனிக்காரர் மகன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அந்த வெற்றிக்கே படாதபாடுபட வேண்டியிருந்தது. இதற்கே பல கோடிகளை வாரியிறைக்க வேண்டியிருந்தது. மேலும், கடந்த தேர்தலில் இலைக்கட்சியுடன் தாமரை உள்ளிட்ட கட்சிகளும் கூட்டணியில் இருந்தன. மேலும், தனது மகன் ஜெயிச்சால் போதும் என்பது போல, தேனிக்காரர் தொகுதி முழுவதும் பம்பரமாக சுழன்றார். மற்ற தொகுதியில் பெயரளவுக்கு மட்டும் பிரசாரம் செய்தார்.
இதை சொல்லித்தான் சேலத்துக்காரர், தேனிக்காரரை சைசாக கட்டம் கட்டினார் என்பது தனிக்கதை. தற்போது இலைகட்சியில் இருந்து தேனிக்காரர் நீக்கப்பட்டாலும், தாமரை தயவு தங்களுக்குத்தான் இருக்கிறது. ஹனிபீ தொகுதியில் தாமரை தயவோடு தன் மகனை நிறுத்தலாமுன்னு தேனிக்காரர் திட்டமிட்டு இருந்தார். கடந்த முறை தாமரையோடு சேராமல் தனித்து போட்டியிட்ட குக்கர் இம்முறை தாமரையோடு சேர்ந்து போட்டியிடுகிறார். இதில் என்ன கொடுமைன்னா, தேனிக்காரர் மீண்டும் மகனை நிறுத்த திட்டமிட்டுள்ள ஹனிபீ தொகுதியில், குக்கர் கட்சித் தலைவர் 2004க்கு பிறகு மீண்டும் நேரடியாக போட்டியிட திட்டமிட்டுள்ளாராம்.
இதற்காக குக்கர் கட்சி நிர்வாகிகள் மூலமாக ஹனிபீ தலைநகர் பகுதியில் வீடு பார்க்கும் படலத்தை தொடங்கி உள்ளதாகவும் செய்திகள் பரவுகின்றன. குக்கர் கட்சித் தலைவர் ஹனிபீ தொகுதியில் போட்டியிட்டால் தனது மகனை எங்கே நிறுத்துவது? அப்படி வேறு தொகுயில் நிறுத்தினால் தனது சொந்த தொகுதியில். தாமரை தயவோடு போட்டியிடும் குக்கர் கட்சித் தலைவருக்கு வேலை பார்க்கணுமே… இங்கேயே இருக்க நேரிட்டால் தனது மகனின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகி விடுமே…’’ என தேனிக்காரர் தவியாய் தவித்து வருகிறார்’’ என்றார் விக்கியானந்தா..
‘‘கேஸ் போட்டுருவேன்.. துட்டு கொடு.. என மிரட்டியே கல்லா கட்டுறாராமே ஒரு காக்கி..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கோவை மாவட்ட மதுவிலக்கு காவல்துறையில், ஸ்ரீராமனின் தம்பி பெயர் கொண்ட ஒருவர் எஸ்.ஐ.யாக பணியாற்றி வருகிறார். இவர், கிணத்துக்கடவில் உள்ள காவலர் குடியிருப்பில் வசிக்கிறார். இவர், கிணத்துக்கடவு சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளிலும், `பார்’களிலும் சுற்றி சுற்றி வலம் வருகிறார். ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி, மிரட்டி, வாரம்தோறும் தலா ரூ.2,000 தரவேண்டும் என அடாவடியாக வசூல் எடுத்துவிடுகிறார்.
அதுமட்டுமின்றி, கிணத்துக்கடவு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை அருகில் நின்றுகொண்டு, மது வாங்கிச்செல்லும் வடமாநில தொழிலாளர்களை மிரட்டி, “கேஸ் போட்டுருவேன்.. துட்டு கொடு….’’ எனக்கூறி பணம் பறிக்கிறார். பணம் கொடுக்காத நபர்களிடமிருந்து மது பாட்டில்களை பிடுங்கி, அதை வெளிமார்க்கெட்டில் விற்று, அதிலும் காசு பார்த்து விடுகிறார். இவரது அடாவடி பற்றி யாரேனும் கேள்வி கேட்டால், “மேலிடத்தில் வேண்டுமானால் புகார் சொல்லுங்கள்… அவர்களால் என்னை ஒன்றும் செய்ய முடியாது.. பங்கு கொடுக்க வேண்டிய இடத்திற்கு கரெக்ட்டாக பங்கு கொடுத்து வருகிறேன்…’’ என மிரட்டலாக பதிலளிக்கிறார். பூனைக்கு மணி கட்டுவது யாரு… என்கிறார்கள், இங்குள்ள நியாயமான காவலர்கள்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘இலைக்கட்சி தலைவர் லூஸ் டாக் விட்டுவிடாமல் இருக்க வழிநடத்துகிறாராமே தனயன்…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘இலைக்கட்சி தலைவரான சேலத்துக்காரர் கூட்டணியில இருந்து ஏன் வெளியே வந்தார் என்ற விவரம் தெரியாமல் பாஜவினர் விழிபிதுங்கி போயிருக்காங்களாம். என்ன காரணமா இருக்கும் என்ற கேள்வியோடு சுற்றிவரும் அவர்களுக்கு, மலராத கட்சியின் மாஜி போலீஸ்காரரிடம் போய் கேளுங்கள் என்று கூறி வருகிறார்களாம் இலைக்கட்சியினர். இனி உலகமே இடிந்து விழுந்தாலும் ஆயிரம் சதவீதம் கூட இலைக்கட்சி தலைவர் பாஜவுடன் கூட்டணியில் சேரவே மாட்டார் என்பது மட்டும் உறுதின்னு சொல்றாங்க. அதே நேரத்துல இலைக்கட்சி தலைவரை வழிநடத்துவது அவரது மைந்தர்தானாம்.
இதுவரை வெளியே வராமல் இருந்த அவர் சமீபகாலமாக வெளியே தலைகாட்டுறாராம். கோயிலுக்கு சென்றாலும் குடும்பத்தோடுதான் செல்லவேண்டும், குறிப்பாக மகனை அழைத்துச் செல்லவேண்டும் என ஜோசியர் சொல்லியிருக்காராம். இதனால மகனை அழைச்சிக்கிட்டே கோயிலுக்கு போறாராம் இலைக்கட்சிக்தலைவர். அதே நேரத்துல இன்னொன்றையும் சொல்றாங்க. பாஜ கூட்டணியில இருந்து வெளியே வந்தபிறகு பல்வேறு தலைவர்கள் சீண்டுவது போன்ற கேள்விகளை கேட்பார்கள். தேவையில்லாமல் எதற்கும் பதில் அளித்துவிட வேண்டாம்.
தேர்தல் தேதியை அறிவித்த பிறகு, பதில்களை சுடச்சுட சொல்லுங்கள் என அரசியல் ஆலோசகர் ஆலோசனை வழங்கியிருக்காராம். அதை மீறி பேசினால், சின்னத்துக்கு சிக்கலை ஏற்படுத்துவார்கள். பல்வேறு குடைச்சல்கள் ஏற்படும் என கூறப்பட்டுள்ளதாம். இதனால் தந்தை எதையும் பேசிவிடக் கூடாது என்பதற்காக கடிவாளம் போல அழைத்து செல்கிறாராம் மகன். இதனால்தான் சமீபத்திய அவரது கோயில் தரிசனம் என்கின்றனர் இலைக்கட்சிக்காரர்கள். இப்போது மகனை வெளியே கொண்டுவந்து டிரையல் பார்க்கிறார். போகப்போக மகனையும் உள்ளே கொண்டு வருவார் என்கின்றனர் அடிப்பொடிகள்..’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மாஜி எம்எல்ஏவை சிக்க வைக்க மாஜி மந்திரிகள் திட்டம் போட்டிருக்கிறதா சொல்றாங்களே.. நிஜந்தானா..’’ என ஆர்வத்தோடு கேட்டார் பீட்டர் மாமா. ‘‘பூட்டு மாவட்டத்தில் மாஜி மந்திரிகளான உளறல் பேச்சுக்காரரும், ஊர்ந்து செல்லும் உயிரின ஊர் பெயரை தன் பெயருக்கு முன்பாக கொண்டவரும் தற்போது வரும் எம்பி தேர்தல் தொடர்பாக கடும் குழப்பத்தில் உள்ளனர். ஏற்கனவே, வரும் தேர்தலில் மகன், மருமகன் என வாரிசுகளை களமிறக்க வரிந்து கட்டி நின்றிருந்தனர். தற்போது ஜெயிப்பது சிரமம் என்பதால், நைசாக கழன்று கொள்ளும் முடிவில் உள்ளனர்.
இதற்கு பதிலாக தங்களுக்கு பிடிக்காத மாஜி எம்எல்ஏ பெயரை தலைமையிடம் தொடர்ந்து பரிந்துரைக்கின்றனராம். இதுகுறித்து விசாரித்தபோது, சேலத்துக்காரரின் ஆசி அதிகமாக உள்ளதால், மாவட்டத்தில் மாஜி எம்எல்ஏவின் செல்வாக்கு உயர்ந்து வருகிறதாம். இதனால் அடுத்த சட்டமன்ற தேர்தலில் எப்படியும் இவர் சீட் கேட்டு வருவார். எம்பி தேர்தலில் நிற்க வைத்து, தோல்வி அடைய நேரிட்டால் எம்எல்ஏ சீட் கேட்டு வர மாட்டார். வாரிசுகளை ஏதாவது ஒரு தொகுதியில் களமிறக்கலாம் என திட்டமிட்டுள்ளனராம்.
கூடுதலாக, மாஜி மேயர் பெயரையும் பரிந்துரைத்துள்ளனர். தலைமை பேசிப்பார்த்தும் இருவரும் மசியவில்லையாம். இதனால் மீண்டும் மாஜி மந்திரிகளிடம் வேறு யாராவது இருக்கிறார்களா என தலைமை தரப்பில் இருந்து தொடர்ந்து பேசப்படுகிறதாம். ஆனாலும், மாஜி எம்எல்ஏவையே நிற்க வைக்கலாமென்றே இருவரும் கூறி வருகின்றனர். மற்ற விஷயங்களில் எலியும், பூனையுமாக இருப்பவர்கள், இந்த விஷயத்திலாவது ஒற்றுமையாக இருக்கின்றனரே என இலைக்கட்சி தொண்டர்கள் பேசி வருகின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா.