திருமலை: தெலங்கானாவில் வீட்டில் தனியாக இருந்த இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்ற டெலிவரி பாய் சிசிடிவி காட்சி மூலம் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் ஒரு பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண். அவ்வப்போது ஆன்லைனில் சில பொருட்களை ஆர்டர் செய்து பெறுவது வழக்கமாம். இதேபோல் கடந்த வாரம் ஒரு பொருளை ஆர்டர் செய்துள்ளார். அதன்பேரில் டெலிவரி பாய் நேற்றுமுன்தினம் இவரது வீடு தேடி வந்து, ஆர்டர் செய்த பொருளை கொடுத்துள்ளார். அப்போது வீட்டில் இளம்பெண் மட்டும் தனியாக இருப்பதை அறிந்த அந்த வாலிபர், திடீரென வீட்டுக்குள் நுழைந்து கதவை தாழ்ப்பாள் போட்டுள்ளார்.
இதனால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் கூச்சலிட்டார். இருப்பினும் அந்த வாலிபர் இளம்பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றதாக தெரிகிறது. சத்தம் கேட்ட அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து கதவை தட்டினர். இதனால் அந்த வாலிபர் கதவை திறந்துகொண்டு பைக்கில் ஏறி தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து அந்த பெண் மஞ்சுளாபூர் ஊரக காவல் நிலையத்தில் நேற்றுமுன்தினம் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். இதில் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டு தப்பி ஓடிய டெலிவரி பாய் விக்னேஷ்(23) என தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.