திருமலை: தெலங்கானா மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் 119 இடங்களில் தனித்து போட்டியிட உள்ளதாக ஒய்.எஸ். சர்மிளா அறிவித்துள்ளார். ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் தங்கையும் ஒய்எஸ்ஆர் தெலங்கானா கட்சி தலைவருமான ஷர்மிளா நேற்று ஐதராபாத்தில் அக்கட்சி மாநில நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது சர்மிளா பேசியதாவது: தெலங்கானா மாநில சட்டமன்ற ேதர்தலில் பாலேரு தொகுதியில் நான் போட்டியிட உள்ளேன்.
மேலும் வேறு ஒரு இடத்திலும் என இரண்டு இடங்களில் போட்டியிடுவேன். எனது தாயார் விஜயம்மா மற்றும் எனது கணவர் அனில் போட்டியிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. தேவைப்பட்டால் விஜயம்மா போட்டியிடுவார். நான்கு மாதம் காங்கிரஸ் கட்சிக்காக காத்திருந்தேன். ஆனால் அவர்கள் முடிவு தெரிவிக்காததால் தெலங்கானா மக்களுக்காக 119 சட்டமன்ற தொகுதிகளில் தனித்து போட்டியிட உள்ளோம். வேட்பாளர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.