தெலங்கானாவில் கோர விபத்து லாரிகள் மோதி 5 பேர் பலி

*3 பேர் படுகாயம்

திருமலை : தெலங்கானா மாநிலத்தில் லாரிகள் மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர். தெலங்கானா மாநிலம் மேடக் மாவட்டம் வாடியாரம் என்ற இடத்தில் பைபாஸ் சாலையில் நேற்று காலை லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது பின்னால் வந்த மற்றொரு லாரி வேகமாக மோதியது. இதில் பின்னால் நெல்மூட்டைகளை ஏற்றி வந்த லாரியின் முன்பகுதி சுக்கு நூறாக நொறுங்கியது. இந்த விபத்தில் டிரைவருடன் கேபினில் அமர்ந்திருந்த 5 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 3 பேர் பலத்த காயம் அடைந்தனர். தகவல் கிடைத்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து லாரியில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

காயமடைந்தவர்கள் மேடக் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிவேகமே விபத்துக்கு காரணம் என முதற்கட்டமாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இறந்தவர் குறித்த விவரங்களை சேகரிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக நேற்று காலை அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related posts

ஆன்லைனில் வழக்கறிஞர் சேவைக்கு எதிராக நடவடிக்கை: இந்திய பார் கவுன்சிலுக்கு ஐகோர்ட் உத்தரவு

அக்னிவீர் திட்டத்தில் ராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு : தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு 11ம் தேதி நடக்கிறது

பவர்கிரிட் நிறுவனத்தில் 373 இன்ஜினியர்ஸ் டிரெய்னீஸ்