தண்டையார்பேட்டை: காசிமேட்டில் விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது வாகனத்தில் இருந்து கீழே தவறி விழுந்ததில் ஒரு வாலிபரின் தலையில் படுகாயம் ஏற்பட்டது. பின்னர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு அந்த வாலிபர் பரிதாபமாக பலியானார். இதுகுறித்து காசிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். சென்னை ராயபுரம், ஜி.எம்.பேட்டை, ‘பி‘ பிளாக்கில் அஜித்தா என்பவர், விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, ஒரு பிரமாண்ட விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்துள்ளார். அந்த சிலையை கடந்த 9ம் தேதி இரவு கரைப்பதற்காக, ஒரு மினி சரக்கு வேனில் ஏற்றிக்கொண்டு அஜித்தா மற்றும் குழுவினர் கடற்கரைக்கு சென்றுள்ளனர்.
அப்பகுதியை சேர்ந்த வாலிபர்கள் சிலரும் உடன் சென்றுள்ளனர்.பிரமாண்ட விநாயகர் சிலையுடன் மினி சரக்கு வேன் ராயபுரம், எஸ்.எம்.செட்டி தெரு சந்திப்பில் சென்றபோது வாகனத்தில் விநாயகர் சிலையை பிடித்தபடி சென்ற காசிமேடு, சிங்காரவேலன் நகரை சேர்ந்த பிரேம்குமார் (30) என்ற வாலிபர், நிலைதடுமாறி சாலையில் விழுந்துள்ளார். அவருக்கு தலையில் படுகாயம் ஏற்பட்டது. அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். தீவிர சிகிச்சை பெற்று வந்த பிரேம்குமார், நேற்றிரவு உயிரிழந்தார். காசிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.