மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்அன்னூர் சாலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிறுமுகை லிங்காபுரம் கோவிந்தனூர் பகுதியைச் சேர்ந்த சிவராஜ் மகன் நவீன் (27), காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராதவிதமாக கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர பாலத்தின் தடுப்புச்சுவர் மீது பயங்கரமாக மோதி அருகில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. பின்னர் தீப்பற்றி எரிந்தது. காற்றின் வேகம் காரணமாக தீ மளமளவென பற்றி கார் முழுவதுமாக தீக்கிரையானது.
கவிழ்ந்த வேகத்தில் கதவு லாக் ஆனதால் நவீன் காருக்குள்ளேயே சிக்கிக்கொண்டார். இதனால் டிரைவர் சீட்டிலேயே அவர் உடல் கருகி பரிதாபமாக பலியானார். இச்சம்பவத்தை கண்ட அக்கம்பக்கத்தினர் தகவலையடுத்து மேட்டுப்பாளையம் தீயணைப்புத் துறையினர் சென்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். எனினும் கார் முழுவதுமாக எரிந்து நாசமானது. இதுகுறித்து போலிசார் வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர்.