Saturday, September 21, 2024
Home » இளம்பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்த சைக்கோ இன்ஜினியர் பற்றி திடுக்கிடும் தகவல்

இளம்பெண்ணை கொன்று சூட்கேசில் அடைத்த சைக்கோ இன்ஜினியர் பற்றி திடுக்கிடும் தகவல்

by Ranjith

* கல்லூரியில் படிக்கும் போதே விலைமாதர்களுடன் பழக்கம், ஊதியத்தில் 60 சதவீதத்தை பெண்களுக்கே வாரி இறைத்தார்

சென்னை: பாலியலுக்கு அழைத்து வந்த இளம்பெண்ணை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சைக்கோ இன்ஜினியர் மணிகண்டனுக்கு கல்லூரியில் படிக்கும் போதே விலை மாதர்களுடன் பழக்கம் இருந்ததும், சென்னைக்கு வந்த பிறகு, அதன் தாக்கம் தீவிரமானதாகவும் போலீசார் நடத்திய விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது. சென்னை துரைப்பாக்கம் குமரன் குடில் நகர் மெயின் ரோட்டில் உயர் காவல் துறை அதிகாரி ஒருவர் புதிதாக கட்டி வரும் கட்டிடத்தின் அருகே நேற்று முன்தினம் இளம்பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டு சூட்கேசில் உடலை அடைத்து வீசப்பட்டிருந்தது.

தகவல் அறிந்து துரைப்பாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபு உடனே சம்பவ இடத்திற்கு சென்று சூட்கேசில் சடலமாக கிடந்த பெண்ணை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார். பிறகு கொலையான பெண்ணின் அடையாளங்களை வைத்து அவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தினர். அதேநேரம் பெண்ணை கொலை செய்து சூட்கேசில் வீசிய நபர் யார் என்பது குறித்தும் விசாரித்தனர். இன்ஸ்பெக்டர் பிரபு ஏற்கனவே விபசார தடுப்பு பிரிவில் சிறிது காலம் பணியாற்றி வந்தார்.

இதனால் சூட்கேசில் சடலமாக கிடந்த பெண்ணின் அடையாளங்களை வைத்து, பலமுறை பாலியல் புரோக்கர்களை கைது செய்யும் போது, அவர்களிடம் இருந்து மீட்கப்பட்ட பெண் போல் இருப்பதாக சந்தேகமடைந்து, தனது பாணியில் விசாரணையை அவர் நடத்தினார். அதில் தான், பாலியல் புரோக்கர்கள் கொடுத்த தகவலின்படி மாதவரம் ஸ்ரீகிருஷ்ணா நகர், பொன்னியம்மன்மேடு பகுதியை சேர்ந்த வெள்ளையம்மாள் (எ) தீபா (35) என அவர் அடையாளம் கண்டறியப்பட்டது.

அதேநேரம் சூட்கேஸ் வீசப்பட்ட பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் வாலிபரையும் போலீசார் அடையாளம் கண்டனர். ஆனால் அவர் யார், எந்த பகுதியை சேர்ந்தவர் என்று உடனே கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட மணிகண்டனிடம் நடத்திய விசாரணை குறித்து போலீசார் கூறியதாவது: சிவகங்கை மாவட்டம் உலகம்பட்டி பழைய ஊரணி தெருவை சேர்ந்த மீனாட்சி சுந்தரம் என்பவரின் மகன் மணிகண்டன். இவர் மெக்கானிக்கல் இன்ஜினியர் படிப்பை சொந்த மாவட்டத்திலேயே முடித்துள்ளார். பள்ளி படிக்கும் போதே மணிகண்டனுக்கு தவறான பழக்கம் இருந்துள்ளது.

பிறகு இன்ஜினியரிங் கல்லூரிக்கு சென்ற பிறகு, இளம் பெண்களுடன் பழக்கத்தில் தனி நபராக ஈடுபட்டுள்ளார். அதற்கான பண தேவைக்கு, கல்லூரியில் செய்முறை தேர்வுக்கு பணம் கட்டணம் என பல பொய்களை தனது அம்மாவிடம் கூறி பணத்தை வாங்கி வந்து, விலை மாதர்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். இன்ஜினியரிங் படிப்பு முடிந்ததும், சொந்த ஊரில் ஊதாரியாக சுற்றி கொண்டு, திருமணமான பெண்களுடன் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளார்.

இது மணிகண்டன் அம்மாவின் கவனத்திற்கு வந்தது. இதே நிலை நீடித்தால் மகன் கெட்டுப்போய் விடுவான் என்று சென்னை துரைப்பாக்கத்தில் வசித்து வரும் தனது மகளிடம் நடந்த சம்பவத்தை கூறி, அவரது தாய் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு சென்னைக்கு மணிகண்டனை அனுப்பி வைத்துள்ளார். தனது அக்கா வீட்டிலேயே தங்கி பல இடங்களில் வேலை தேடி வந்துள்ளார் மணிகண்டன். கடைசியாக பெருங்குடியில் பிரபல கார் விற்பனை மற்றும் பழுதுபார்க்கும் நிறுவனத்தில் மாதம் ரூ.16 ஆயிரம் ஊதியத்தில் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

ஐடி நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதி என்பதால், பாலியல் புரோக்கர்களிடம் தன்னுடன் பணியாற்றும் நண்பர்கள் மூலம் பழக்கமானார். அந்த பழக்கத்தில் மணிகண்டன் வாரத்திற்கு ஒரு முறை என மாதம் 4 முறை பாலியல் புரோக்கர் மூலம் இளம்பெண்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அதேபோல் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இளம்பெண் ஒருவருடன் உல்லாசமாக இருந்த நேரத்தில் சைக்கோ போல் மணிகண்டன் இளம்பெண்ணை பல இடங்களில் கடித்து உள்ளார். இதுபற்றி அந்த பெண் தன்னை அனுப்பிய பாலியல் புரோக்கரிடம் கூறியதாக கூறப்படுகிறது.

உடனே இளம்பெண்ணை அனுப்பிய புரோக்கர் தனது நண்பர்களுடன் சேர்ந்து மணிகண்டனை தாக்கி அவரிடம் இருந்து மருத்துவ செலவுக்கு பணத்தை பறித்துள்ளார். மணிகண்டன் தான் சம்பாதிக்கும் பணத்தில் 60 சதவீதம் உல்லாசத்திற்கு மட்டும் பயன்படுத்தி வந்துள்ளார். இது போதாது என்று ஊரில் உள்ள தனது தாயிடம் பணம் பெற்றும் பெண்களுடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார். அதன் பிறகு பாலியல் புரோக்கர் மணிகண்டனுக்கு இளம்பெண்களை அனுப்புவதை நிறுத்திவிட்டார். பிறகு மணிகண்டன் துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் திருநங்கைகளுடன் சென்று வந்துள்ளார்.

துரைப்பாக்கத்தில் உள்ள மணிகண்டன் அக்கா குடும்பத்துடன் ஊருக்கு சென்றால், தன்னுடன் வேலை செய்யும் நெருங்கிய நண்பர் ஒருவருடன் சேர்ந்து இளம் பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்து இருவரும் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அதன்படி தான் தனது அக்கா திருவையாறுக்கு குடும்பத்துடன் சென்ற போது, தன்னுடன் பணியாற்றும் நண்பர் ஒருவர் மூலம் பாலியல் புரோக்கரை தொடர்பு கொண்டு தீபாவை வரவழைத்துள்ளார். அதன் பிறகு தான் பேசிய பணம் கொடுக்காததால் ஏற்பட்ட தகராறில் மணிகண்டன் போதையில் என்ன செய்வது என்று தெரியாமல் சுத்தியலால் அடித்து கொன்றுள்ளார்.

இதுபோன்ற பாலியல் உறவில் அதிக நாட்டத்துடன் மணிகண்டன் இருந்து வந்ததால், விரைவில் திருமணம் செய்ய அவரது தாய் மற்றும் சகோதரி முடிவு செய்து பல இடங்களில் மணிகண்டனுக்கு உறவினர்கள் மூலம் பெண் பார்த்து வந்துள்ளனர். அதற்குள் மணிகண்டன் தன் சுய நினைவிழந்து, சைக்கோ போல் பாலியலுக்கு அழைத்து வந்த பெண்ணை கொன்றது விசாரணையில் தெரிய வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

* புகார் வந்த 2 மணி நேரத்தில் குற்றவாளி கைது எப்படி?
புதிதாக போலீஸ் உயர் அதிகாரி கட்டி வரும் வீட்டின் அருகே சூட்கேஸ் வீசப்பட்டு, அதில் இளம்பெண்ணின் உடல் இருப்பதை பார்த்த போலீசார் அந்த பகுதி சிசிடிவி கேமரா பதிவுகள் மூலம் வாலிபர் வீசிச்செல்வதை கண்டுபிடித்தனர். ஆனால், அந்த நபர் யார் என்பது தெரியவில்லை. எனவே, இன்ஸ்பெக்டர் பிரபு, பாலியல் புரோக்கர்களின் உதவி மூலம் தீபா யாருடன் வந்தார் என்பது குறித்து தகவல்களை அதிரடியாக சேகரித்தார்.

அப்போது தான், மணிகண்டன் (23) பாலியல் புரோக்கர் ஒருவர் மூலம், உல்லாசத்துக்கு தீபாவை கடந்த 17ம் தேதி 8 மணி நேரத்திற்கு ரூ.18 ஆயிரம் விலை பேசி அழைத்து சென்றது தெரியவந்தது. உடனே அடுத்த 2 மணி நேரத்தில் கொலை செய்யப்பட்ட தீபாவின் கடைசியாக துண்டிக்கப்பட்ட செல்போன் சிக்னல்களை வைத்து, உடல் வீசப்பட்ட 2வது தெருவில் பதுங்கி இருந்த கொலையாளி மணிகண்டனை இன்ஸ்பெக்டர் பிரபு தலைமையிலான போலீசார் அடையாளம் கண்டு கைது செய்தனர்.

You may also like

Leave a Comment

seventeen − 8 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi