தாயுடன் உல்லாசமாக இருந்த வாலிபர் அடித்துக்கொலை: 2 மகன்கள் உள்பட 3 பேர் கைது

தஞ்சை: தாயுடன் உல்லாசமாக இருந்த வாலிபரை இரும்பு கம்பியால் அடித்துக்கொன்ற 2 மகன்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் மனோரா அருகில் கருவேலங்காட்டில் நேற்று காலை வாலிபர் ஒருவர் பலத்த காயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அப்போது அந்தவழியாக சென்றவர்கள் காட்டுப்பகுதியில் இருந்து வாலிபரின் அபய குரல் வருவதைகேட்டு அங்கு சென்று பார்த்தனர். அப்போது அங்கு பலத்த காயங்களுடன் கிடந்தவர் மல்லிப்பட்டினம் செம்பருத்தி நகரை சேர்ந்த மீனவர் ராஜா(36) என தெரியவந்தது.

இதையடுத்து ராஜாவின் தாய் நாகேஷ்வரிக்கு தகவல் கொடுத்தனர். அவர் விரைந்து வந்து மகனை பார்த்து கதறியழுதார். தகவல் அறிந்து வந்த சேதுபாவாசத்திரம் போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் ராஜாவின் உடலை பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரது உடலை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே ராஜா இறந்து விட்டதாக கூறினர்.இந்நிலையில் தனது மகன் கொலையில் சரபேந்திரராஜன்பட்டினத்தை சேர்ந்த விக்னேஷ் (எ)விக்கி(22), அவரது தம்பியான 17 வயது சிறுவன், மற்றும் அதே பகுதியை சேர்ந்த குமார் (51) ஆகிய 3 பேர் மீது சந்தேகம் இருப்பதாக ராஜாவின் தாய் நாகேஷ்வரி சேதுபாவாசத்திரம் போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து, விக்கி, அவரது தம்பி மற்றும் குமார் ஆகிய மூன்று பேரையும் பிடித்து வந்து விசாரித்தார். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் போலீசாருக்கு கிடைத்தது. அது குறித்த விவரம் வருமாறு: மல்லிப்பட்டினம் செம்பருத்தி நகரைச் சேர்ந்த செல்வம் மனைவி அபூர்வம்(45). 2 குழந்தைகள் உள்ள நிலையில் கருத்துவேறுபாடு காரணமான செல்வம், அபூர்வத்தை பிரிந்து சென்று விட்டார். அபூர்வத்தின் மூத்த மகன் விக்கி திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். இளைய மகனான 17வயது சிறுவன் அப்பகுதியில் உள்ள இறால் பண்ணையில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.

இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த குமார்(51), ராஜா(36) ஆகிய 2 பேரிடமும் அபூர்வத்துக்கு கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே குமாரிடம் உள்ள தொடர்பை அபூர்வம் படிப்படியாக குறைத்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த குமார் அபூர்வத்தின் மகன்களிடம் உனது அம்மாவுக்கும், ராஜாவுக்கும் தொடர்பு உள்ளது என்று கூறி ராஜாவை மாட்டி விட்டுள்ளார். இதனை அவர்கள் நம்ப மறுத்தனர். இதனால் நேற்று அதிகாலை அபூர்வத்தின் வீட்டில் ராஜாவும், அபூர்வமும் தனிமையில் இருப்பதை அறிந்த குமார், விக்கியையும் அவரின் தம்பியையும் அழைத்து சென்று காட்டியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த 2 பேரும் ராஜாவை சரமாரியாக இரும்பு கம்பியால் தாக்கி பைக்கில் ஏற்றிச்சென்று கருவேலங்காட்டில் வீசிசென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் 3 பேரையும் கைது செய்து பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். குமார், விக்கி ஆகிய 2 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். விக்கியின் தம்பி திருச்சியிலுள்ள சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்க்கப்பட்டான்.

Related posts

கடந்த ஜூன் மாதத்தில் இந்தியா முழுவதும் 3,40,784 கார்கள் விற்பனை

ரெட்டியார்சத்திரம் அருகே தெருநாய் கடித்து 10 ஆடுகள் பலி

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 20 கிலோ கஞ்சா கடத்திய ஒடிசா பெண்கள் 2 பேர் கைது