கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அருகே நுழைவுத் தேர்வில் 7 மதிப்பெண் குறைந்ததால் பூச்சி மருந்து குடித்து வாலிபர் தற்கொலை செய்துகொண்டார். கும்மிடிப்பூண்டி அடுத்த ஆர்.என்.கண்டிகை கிராமத்தில் வசித்தவர் தமிழரசு (25). பொறியியல் பட்டதாரி. இவர் ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு வாயிலாக மேல்படிப்பு படிக்க காத்திருந்தார். இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழரசு, ஜேஇஇ நுழைவுத் தேர்வு எழுதியிருந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு நுழைவுத் தேர்வு முடிவு வெளியானது.
அதில், தமிழரசு 7 மதிப்பெண்கள் குறைவாக பெற்றிருந்தார். இதனால் அவர் மன உளைச்சலுக்கு ஆளானார்.அதன்படி, வயலுக்குத் தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்தை தமிழரசு குடித்துவிட்டார். அக்கம்பக்கத்தினர் தமிழரசுவை மீட்டு சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி தமிழரசு நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.