செங்கல்பட்டு அருகே இன்று அதிகாலை பயங்கரம்; நடைபயிற்சி சென்ற வாலிபர் அரிவாளால் வெட்டி கொலை: முன்விரோதமா? போலீசார் விசாரணை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே இன்று அதிகாலை நடைபயிற்சி சென்ற வாலிபர் மர்ம கும்பலால் அரிவாளால் சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

செங்கல்பட்டு அடுத்த புலிப்பாக்கம் காந்தலூர் பகுதியை சேர்ந்தவர் சரவணன் (32). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சாலை விபத்தில் கால்முறிவு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் இன்று அதிகாலை வழக்கம்போல் தனது வீட்டின் அருகில் சரவணன் நடைபயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சரவணனின் தலை மற்றும் முதுகு பகுதிகளில் சரமாரி வெட்டிவிட்டு தப்பினர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்களில் பலர் ஓட்டம் பிடித்தனர். சிலர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய சரவணனை மீட்டு சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் செங்கல்பட்டு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சரவணனின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சரவணனை கொலை செய்தது யார்? எதற்காக கொலை செய்தனர்? முன்விரோதம் காரணமாக கொலை நடந்ததா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். செங்கல்பட்டு அருகே நடைபயிற்சி சென்ற வாலிபர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்ட சம்பவம் புலிப்பாக்கம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts

ஆந்திராவுக்கு ரயில் மூலம் கடத்த முயன்ற 1413 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

சிவகங்கை இளையான்குடியில் நேற்று விஷவாயு தாக்கி 2 பேர் உயிரிழந்ததற்கு நிவாரணம் கோரி உறவினர்கள் மறியல்

அனுமதியின்றி வேள்பாரி நாவலின் காட்சிகள் படமாக்கப்பட்டால் சட்ட நவடிக்கையை சந்திக்க நேரிடும்: இயக்குநர் ஷங்கர்