தஞ்சாவூர், மே 1:அய்யம்பேட்டை அருகே மது விற்றவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.அய்யம்பேட்டை போலீஸ் சரக பகுதியில் அனுமதியின்றி காரில் வைத்து மதுபானங்கள் விற்பதாக பாபநாசம் டிஎஸ்பி பூரணிக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவருடைய உத்தரவின் பேரில் அய்யம்பேட்டை இன்ஸ்பெக்டர் வனிதா, சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முருகதாஸ் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அகரமாங்குடி பகுதியில் வேகமாக வந்த ஒரு காரை சுற்றி வளைத்து போலீசார் சோதனை நடத்தினர்.
சோதனையின் போது காரில் ஏராளமான மதுபான பாட்டில்கள் அடுக்கி வைத்திருந்ததை கண்டு பிடித்தனர். இதையடுத்து காரை ஓட்டிவந்த அகரமாங்குடியை சேர்ந்த ஆனந்தராஜ் (வயது 29) என்பவரிடம் நடத்திய விசாரணையில் காரில் மதுபான பாட்டில்களை வைத்து விற்பனை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து ஆனந்தராஜை கைது செய்த போலீசார் 30 மதுபான பாட்டில்களையும், செல்போன் மற்றும் மதுபான விற்பனைக்கு பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட ஆனந்தராஜ் மீது கொலை முயற்சி வழக்குகள் உள்பட 20 வழக்குகள் நிலுவையில் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.