மீனம்பாக்கம்: சென்னை பொழிச்சலூர், கமிஷனர் காலனியை சேர்ந்தவர் பாலாஜி. இவர் அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி ஐஸ்வர்யா (33). இவர் மகன், மகளுடன் வசித்துவந்தார். சென்னை விமானநிலைய மல்டிலெவல் கார் பார்க்கிங் பகுதியில் 4வது மாடியில் உள்ள தியேட்டரில் படம் பார்ப்பதற்காக 2 குழந்தைகளுடன் ஐஸ்வர்யா வந்துள்ளார். பின்னர் 2 குழந்தைகளையும் தியேட்டருக்குள் படம் பார்க்க அனுப்பிவைத்துவிட்டு ஐஸ்வர்யா வெளிவந்திருக்கிறார். இதன்பின்னர், சென்னை விமானநிலைய வளாகத்துக்குள் புதிதாக கட்டப்பட்ட 6 அடுக்கு மாடிகளுடன் கூடிய மல்டிலெவல் கார் பார்க்கிங் பகுதியை ஐஸ்வர்யா சுற்றி பார்த்ததாக கூறப்படுகிறது. அப்போது திடீரென ஐஸ்வர்யா 4வது மாடியில் இருந்து குதித்துவிட்டார். இதில் தலையில் படுகாயம் அடைந்த ஐஸ்வர்யா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்.
இதை பார்த்ததும் விமான நிலைய பாதுகாவலர்கள், அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி அறிந்ததும் விமான நிலைய போலீசார் சென்று விசாரித்தனர். இதன்பின்னர் அவரது சடலத்தை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். கடந்த சில நாட்களாக ஐஸ்வர்யா கடும் மனஉளைச்சலில் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. எனவே, குடும்பத் தகராறு காரணமாக தற்கொலை செய்தாரா, மனஅழுத்தம் காரணமாக தற்கொலை செய்தாரா என்ற கோணங்களில் விசாரிக்கின்றனர். சென்னை விமான நிலையத்தின் மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை செய்துகொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.