திருமணமான 8 மாதத்தில் இளம்பெண் தற்கொலை

கீழக்கரை: திருமணமான 8 மாதத்தில் விழுப்புரத்தை சேர்ந்த இளம்பெண் தற்கொலை செய்த சம்பவம் கீழக்கரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்தவர் சுபாஷ். இவர், 8 மாதங்களுக்கு முன் விழுப்புரத்தை சேர்ந்த ஐஸ்வர்யா (19) என்பவரை திருமணம் செய்தார். இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம், கீழக்கரையில் உள்ள ஒரு ஓட்டலில் சுபாஷ் வேலை பார்த்து வருகிறார். இதையொட்டி நகரில் உள்ள 500 பிளாட் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து, மனைவி ஐஸ்வர்யாவுடன் சுபாஷ் தங்கி வந்தார். நேற்று காலை ஓட்டலுக்கு வேலைக்குச் சென்ற சுபாஷ் மாலையில் வீடு திரும்பியுள்ளார். அப்போது கதவு பூட்டிக் கிடந்துள்ளது. பலமுறை தட்டிப்பார்த்தும் திறக்காததால், ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்துள்ளார். அப்போது ஐஸ்வர்யா தூக்கில் தொங்கியிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

உடனே கதவை உடைத்து உள்ளே சென்ற சுபாஷ், மனைவியை மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் கீழக்கரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு ஐஸ்வர்யாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்ததாக தெரிவித்தனர். இது குறித்து கீழக்கரை போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து கீழக்கரை போலீசார் வழக்குப்பதிந்து இளம்பெண்ணின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும், திருமணமாகி 8 மாதத்தில் இளம்பெண் தற்கொலை செய்துள்ளதால் ஆர்டிஓ விசாரணையும் நடைபெற உள்ளது.

Related posts

பலத்த போலீஸ் பாதுகாப்பு: ஜம்மு – காஷ்மீரில் நாளை 24 தொகுதிகளில் வாக்குப்பதிவு

மஞ்சூர்-கோவை சாலையில் அரசு பஸ்சை யானைகள் வழிமறித்ததால் பரபரப்பு

ராமேஸ்வரம் தனுஷ்கோடியில் வலசை வரும் பறவைகளை கண்டுகளிக்க 2 தொலை நோக்கியுடன் மரப்பாலக் கூண்டு