சென்னை: தொழில்நுட்ப கோளாறு காரணமாக லண்டன், சிங்கப்பூர் விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம், தினமும் அதிகாலை 3.30 மணிக்கு லண்டனில் இருந்து சென்னை வந்துவிட்டு, மீண்டும் அதிகாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து லண்டன் புறப்பட்டுச் செல்லும். இந்நிலையில் கோளாறு காரணமாக, சவுதி அரேபியாவின் ரியாத் விமான நிலையத்தில் தரையிறங்கிவிட்டது. கோளாறை சரிசெய்த பின்பு, நேற்று காலை 8.30 மணிக்கு சென்னை வந்த விமானம், 317 பயணிகளும் 5 மணி நேர தாமதமாக காலை 10:30 மணிக்கு லண்டனுக்கு புறப்பட்டது.
இதேபோல் சென்னையில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், தொழில்நுட்ப கோளாறு காரணமாக சிங்கப்பூரில் இருந்தே தாமதமாக சென்னைக்கு வந்ததால், சென்னையில் இருந்து அதிகாலை 1.40 மணிக்கு, சிங்கப்பூர் புறப்பட வேண்டிய விமானமும் தாமதமானது. பிறகு கோளாறு சரி செய்யப்பட்டு, 4 மணி நேரம் தாமதமாக அதிகாலை 5.30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றது. இந்த இரண்டு விமானங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றதால் பயணிகள் மிகவும் அவதிப்பட்டனர்.