சென்னை: சிங்கப்பூர் செல்லும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பயணிகள் விமானம், வழக்கமாக சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு இரவு 11.40 மணிக்கு வந்துவிட்டு, மீண்டும் அதிகாலை 1.40 மணிக்கு சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு புறப்பட்டு செல்லும். ஆனால் நேற்று முன்தினம் அந்த விமானம் தாமதமாக நள்ளிரவு 12.21 மணிக்கு சென்னை வந்தது. விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதால் விமானம் தாமதமாக புறப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதனால் 174 பயணிகளும் பல மணி நேரம் காத்திருந்து அவதி அடைந்தனர். இந்நிலையில் காலை 10 மணி அளவில் கோளாறு சரி செய்யப்பட்டு, விமானம் காலை 10.05 மணிக்கு ஓடுபாதையில் ஓடத் தொடங்கியது. அப்போதும் விமானத்தில் மீண்டும் பிரச்னை ஏற்பட்டு நிறுத்தப்பட்டது. பிறகு மீண்டும் பிரச்னை சரி செய்யப்பட்டு, காலை 10.31 மணிக்கு மீண்டும் விமானம் சிங்கப்பூருக்கு புறப்பட்டுச் சென்றது.