சென்னை: விரைவில் வரவிருக்கும் டெக்ஸ் பார்க் சேலம், நெசவுத் துறையில் பெரிய அளவில் ஊக்கமளிக்கும் என்று தமிழக தொழிற்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள அவர், “தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான திராவிட மாடல் அரசின் பரவலாகப்பட்ட வளர்ச்சி என்ற நோக்கத்திற்கு இன்று மற்றுமொரு பொன் நாள். குறிப்பாக தஞ்சாவூர் மற்றும் சேலம் மக்களுக்கு அற்புதமான நாள் ! தஞ்சாவூர் மற்றும் சேலத்தில் மினி டைடல் பூங்காக்களைத் தொடங்கி, உலகத்தரம் வாய்ந்த தகவல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பை இந்த நகரங்களுக்குக் கொண்டுவந்திருக்கிறார், தமிழ்நாட்டின் முதலமைச்சர் திராவிட நாயகன் அவர்கள்.
தஞ்சாவூர் தற்போது தனது முதல் முக்கிய தகவல் தொழில்நுட்ப வசதியைப் பெற்றுள்ளதற்கு டெல்டா பகுதியின் சட்டமன்ற உறுப்பினராக,பெருமையடைகிறேன்.முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை, இத்திட்டத்தை 15 மாதங்களிலேயே நிறைவு செய்துள்ளது. டைடல் பார்க் களின் தேவை மிகுந்திருப்பதால், நம் மதிப்புக்குரிய முதலமைச்சரின் ஒப்புதலை பெற்று, விரைவில் இரண்டாம் கட்டப் பணிகளை தொடங்கும் வாய்ப்புள்ளது.சேலம் போன்ற இரண்டாம் கட்ட நகரங்களுக்கு அதிக தகவல் தொழில்நுட்பத் தொழில் உள்கட்டமைப்பைக் கொண்டுவர வேண்டும் என்ற நம் முதலமைச்சரின் கனவு, இப்போது சேலம் டைடல் நியோ மூலம் நனவாகியுள்ளது. மேலும், விரைவில் வரவிருக்கும் டெக்ஸ் பார்க் சேலம், நெசவுத் துறையில் பெரிய அளவில் ஊக்கமளிக்கும்.
இந்த மினி டைடல் பூங்காக்கள், புதிய பகுதிகளிலும் 2 மற்றும் 3ஆம் கட்ட நகரங்களிலும் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான சான்றாகும், இதனால் நம் மாநிலத்தின் திறமை மிக்க இளைஞர்கள் தங்கள் வாழ்க்கையை சொந்த ஊர்களிலயே தொடர முடியும். இன்னும் பல மினி டைடல் பார்க்குகள் தொடங்கப்படுவதற்கான வரிசையில் உள்ள நிலையில், நம் முதலமைச்சரின் ட்ரில்லியன் டாலர் தமிழ்நாடு என்ற இலக்கை அடைவதற்கான விரைவுப் பாதையில் நாம் விரைந்து முன்னேறிக் கொண்டுள்ளோம்,”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.