Thursday, September 19, 2024
Home » இந்தியா டி அணிக்கு எதிராக 186 ரன் வித்தியாசத்தில் இந்தியா ஏ அபார வெற்றி: முலானி ஆட்ட நாயகன்

இந்தியா டி அணிக்கு எதிராக 186 ரன் வித்தியாசத்தில் இந்தியா ஏ அபார வெற்றி: முலானி ஆட்ட நாயகன்

by Ranjith

அனந்தபூர்: இந்தியா டி அணியுடனான துலீப் கோப்பை போட்டியில், இந்தியா எ அணி186 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்று 6 புள்ளிகளை தட்டிச் சென்றது. அனந்தபூரில் நடந்த வரும் இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா ஏ 290 ரன், இந்தியா டி 183 ரன் எடுத்தன. 107 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை விளையாடிய இந்தியா ஏ 3 விக்கெட் இழப்புக்கு 380 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இதைத் தொடர்ந்து, 488 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இந்தியா டி அணி 3ம் நாள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 62 ரன் எடுத்திருந்தது.

யஷ் துபே 15, ரிக்கி புய் 44 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். இருவரும் 2வது விக்கெட்டுக்கு 100 ரன் சேர்த்தனர். யஷ் துபே 37 ரன் எடுத்த நிலையில் துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 1 ரன், கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 41, சஞ்சு சாம்சன் 40 ரன் (45 பந்து, 3 பவுண்டரி, 3 சிக்சர்) எடுத்து ஷாம்ஸ் முலானி பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
ஒரு முனையில் விக்கெட் சரிந்தாலும் உறுதியுடன் போராடிய ரிக்கி புய் சதம் விளாசி அசத்தினார்.

ஷரண்ஸ் ஜெயின் 5, ரிக்கி புய் 113 ரன் (195 பந்து, 14 பவுண்டரி, 3 சிக்சர்), சவுரவ் குமார் 22, ஹர்ஷித் ராணா 24 ரன் எடுத்து தணுஷ் கோடியன் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினர். இந்தியா டி அணி 2வது இன்னிங்சில் 301 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (82.2 ஓவர்). அர்ஷ்தீப் சிங் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தியா ஏ பந்துவீச்சில் தனுஷ் கோடியன் 4, ஷாம்ஸ் முலானி 3, கலீல் அகமது, ரியான் பராக் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 186 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்தியா ஏ அணி 6 புள்ளிகள் பெற்றது. ஆல் ரவுண்டராக அசத்திய முலானி ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.

* அனந்தபூரில் இந்தியா சி – இந்தியா அணிகளிடையே நடந்த மற்றொரு போட்டி எத்தரப்புக்கும் வெற்றி தோல்வியின்றி டிராவில் முடிந்தது. இந்தியா சி அணி 525 மற்றும் 128/4 டிக்ளேர் (ருதுராஜ் 62*, ரஜத் பத்திதார் 42*); இந்தியா பி 332 ரன். இந்தியா சி அணிக்கு 3 புள்ளிகளும், இந்தியா பி அணிக்கு 1 புள்ளியும் வழங்கப்பட்டது.

* அடுத்து செப். 19ல் அனந்தபூரில் தொடங்கும் போட்டிகளில் இந்தியா பி – இந்தியா டி, இந்தியா ஏ – இந்தியா சி அணிகள் மோதுகின்றன. இதுவரை நடந்துள்ள போட்டிகளின் முடிவில் இந்தியா சி (9 புள்ளி) முதலிடம் வகிக்கிறது. இந்தியா பி (7), இந்தியா ஏ (6), இந்தியா டி (0) அடுத்த இடங்களில் உள்ளன.

You may also like

Leave a Comment

2 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi