தங்கலான் படத்தை வெளியிடும் முன் ரூ.1 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும்: பட தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஐகோர்ட் உத்தரவு

சென்னை: நடிகர் விக்ரம் நடித்துள்ள தங்கலான் படத்தை வெளியிடும் முன்பு ரூ.1 கோடி பணத்தை டெபாசிட் செய்ய வேண்டும் என்று படத்தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையை சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவரிடம் பல விஐபி.க்கள் பணத்தை கொடுவைத்திருந்தனர் இந்த பணத்தை அவர் பலருக்கு கடனாக கொடுத்து வைத்திருந்தார்.

இதில், நிதி இழப்பு ஏற்பட்டதால் அவர் திவாலானவராக அறிவிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துவிட்டார். இந்த நிலையில் அவரது சொத்துக்களை சென்னை உயர்நீதிமன்றத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சொத்தாட்சியார் அர்ஜூன்லால் சுந்தரதாஸிடம் கடன் வாங்கியவர்களிடம் இருந்து கடன் தொகையை வசூலிக்க கூடிய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.

இந்த வகையில் அர்ஜூன்லால் சுந்தரதாஸிடம் ஸ்டூடியோ கிரீன் பட நிறுவனத்தின் பங்குதாரர்கள் ஞானவேல் ராஜா, ஈஸ்வரன் ஆகியோர் 2013ம் ஆண்டு ரூ.10கோடியே 35 லட்சம் கடன் வாங்கி இருந்தனர். அந்த தொகையை வட்டியுடன் திருப்பி கேட்டு சொத்தாட்சியார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தும் ஞானவேல் ராஜாவும், ஈஸ்வரனும் பணத்தை திருப்பி கொடுக்கவில்லை.

இதை அடுத்து, ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் ஞானவேல் ராஜா, ஈஸ்வரன் ஆகியோரை திவாலானவர்களாக அறிவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை சொத்தாட்சியார் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெயசந்திரன் மற்றும் ஜி.டி.கார்த்திகேயன் அடங்கிய அமர்வு இடைக்கால உத்தரவை
பிறப்பித்துள்ளது.

அந்த உத்தரவில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்து வெளிவர இருக்கக்கூடிய தங்கலான் படத்தை வெளியிடுவதற்கு முன்பு ஆகஸ்ட் 14ம் தேதி ரூ.1 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் எனவும் அதன் பின் படத்தை வெளியிட்டுக்கொள்ளலாம் என்றும் நீதிபதிகள் இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளனர். அதே போல் அடுத்து வெளிவரக்கூடிய கங்குவா படத்தை வெளியிடுவதற்கு முன்பும் ரூ.1 கோடியை டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் இந்த படம் டெபாசிட் செய்தது குறித்து பட வெளியீட்டுக்கு முன்பாக உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து ஒப்புதல் பெற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதிகள் இந்த வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 14ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

 

Related posts

சிவகங்கையில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு

பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை உயிரிழப்பு!!

வீடு வாடகைக்கு கேட்பதுபோல் நடித்து தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற பெண் கைது!