Tuesday, September 17, 2024
Home » தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஒன்றிய அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

தமிழர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்த ஒன்றிய அமைச்சர் செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்பு கேட்க வேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

by Mahaprabhu

சென்னை: பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கபேயில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு தமிழகத்தை சேர்ந்த நபர்தான் காரணம் என்று ஒன்றிய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக திமுக சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் இரு பிரிவினரிடையே கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஷோபா கரந்தலஜே சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஷோபா கரந்தலஜே மன்னிப்புக் கோரினால் ஏற்றுக்கொள்ளப்படுமா? என்பது தொடர்பாக விளக்கமளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன், செய்தியாளர் சந்திப்பு நடத்தி ஷோபா கரந்தலஜே மன்னிப்புக் கோரினால் ஏற்க தயாராக இருப்பதாக கூறினார். மேலும், தனது பேச்சுக்கு மன்னிப்புக் கோருகிறேன். தமிழ் மக்கள் மீது மரியாதை வைத்திருக்கிறேன்.

இனி இப்படி பேசமாட்டேன் என்று ஷோபா கரந்தலஜே தெரிவிக்க வேண்டுமென்றும் அட்வகேட் ஜெனரல் தெரிவித்தார். அதற்கு, ஷோபா கரந்தலஜே தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், செய்தியாளர் சந்திப்புக்கு பதில் மன்னிப்புக்கோரி பிரமாண பத்திரம் தாக்கல் செய்வதாக கூறினார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, செய்தியாளர் சந்திப்பின் போது இவ்வாறு ஒரு கருத்து தெரிவித்த நிலையில் செய்தியாளர் சந்திப்பு நடத்தி மன்னிப்புக் கோரினால்தான் சரியாக இருக்கும் என்றார். இதனையடுத்து, வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 16ம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அதற்குள் செய்தியாளர் சந்திப்பை நடத்தி மன்னிப்புக் கோரி அதனை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

You may also like

Leave a Comment

three + seven =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi