தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு வாரிய தலைவர் நியமனத்தை எதிர்த்து வழக்கு: ஐகோர்ட்டில் அதிமுக சார்பில் பொதுநல மனு தாக்கல்

சென்னை: தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமிக்கப்பட்டதை ரத்து செய்யக்கோரி அதிமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமாரை நியமித்து தமிழக அரசு சமீபத்தில் அறிவிப்பு வெளியிட்டது. இந்நிலையில், சுனில்குமாரின் நியமனத்தை ரத்து செய்யக் கோரி அதிமுக வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ஐ.எஸ்.இன்பதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழகத்தில் தற்போது டிஜிபி அந்தஸ்தில் 16 அதிகாரிகள் உள்ள நிலையில் ஓய்வு பெற்ற டிஜிபி சுனில்குமாரை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தின் தலைவராக நியமித்தது பணியில் உள்ள அதிகாரிகளின் உரிமையை பறிக்கும் செயலாகும்.

தமிழ்நாடு சீருடை பணியாளர் வாரியத்தின் தலைவராக இருந்த சீமா அகர்வால் திடீரென மாற்றப்பட்டு செயற்கையான காலியிடம் உருவாக்கப்பட்டு சுனில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். ஓய்வு பெற்ற அதிகாரி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரியத்தால் எடுக்கப்படும் நியமனங்களில் முறைகேடு நிகழும்பட்சத்தில் அவர் மீது துறை ரீதியான எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது. எனவே, இடைக்கால நிவாரணமாக, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் வாரிய தலைவராக சுனில்குமார் செயல்பட தடை விதிக்க வேண்டும். எதன் அடிப்படையில் சுனில் குமார் நியமிக்கப்பட்டார் என விளக்கம் கேட்க வேண்டும். அவரது நியமனத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Related posts

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் ராஜினாமாவை ஏற்றார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு

வரலாற்றில் இல்லாத அளவுக்கு சென்னையில் ஆபரணத் தங்கம் விலை புதிய உச்சம்!

நெய் விநியோகித்த ஏ.ஆர்.டெய்ரி புட் நிறுவனத்தில் ஒன்றிய உணவு பாதுகாப்புத்துறை சோதனை!!