Wednesday, October 9, 2024
Home » 47 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் ரூ.38,600 கோடியில் 14 புதிய முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முடிவு

47 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் ரூ.38,600 கோடியில் 14 புதிய முதலீடுகளுக்கு தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முடிவு

by Francis
Published: Last Updated on

சென்னை: தமிழகத்தில் ரூ.38,600 கோடி மதிப்புள்ள 14 புதிய முதலீடுகளுக்கு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற தமிழக அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம் பல்வேறு தொழில் துறைகளை உள்ளடக்கிய வகையில் சுமார் 47 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அமைச்சரவையில் கடந்த 29ம் தேதி துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலினும், புதிய அமைச்சர்களாக செந்தில்பாலாஜி, ஆர்.ராஜேந்திரன், கோவி.செழியன், எஸ்.எம்.நாசர் ஆகிய 4 பேரும் நியமிக்கப்பட்டனர். இதைத்தொடர்ந்து அமைச்சர்கள் 4 பேரும் பதவியேற்றுக் கொண்டனர். பொன்முடி உள்ளிட்ட 6 அமைச்சர்களின் இலாகாக்களும் மாற்றப்பட்டன. இந்த பரபரப்பான சூழ்நிலையில் தமிழக அமைச்சரவை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 8ம் தேதி (நேற்று) தலைமை செயலகத்தில் கூடியது. இதன்படி, நேற்று காலை 11 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன் உள்ளிட்ட அனைத்து அமைச்சர்கள், தலைமை செயலாளர் முருகானந்தம், மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். தமிழக அமைச்சரவை கூட்டம் சுமார் 1 மணி நேரம் நடைபெற்றது. அமைச்சரவை கூட்டத்துக்கு பிறகு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நிருபர்களிடம் கூறியதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ரூ.38,600 கோடி முதலீட்டிற்கான 14 புதிய முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த முதலீடுகள் மூலம் 46,931 பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

இந்த முதலீடுகள் மின்னணு துறை சார்ந்த பிரின்டெட் சர்க்யூட் போர்டுகள், குறைந்த மின்னழுத்த பேனல்கள், மொபைல் போன் தயாரிப்புகளுக்கான காட்சிமுறை உதிரிபாகங்கள் மற்றும் உறை தயாரித்தல், பயணிகள் சொகுசு வாகன உற்பத்தி, வாகனங்கள் சார்ந்த உதிரிபாகங்கள், உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் அதற்கான மென்பொருட்கள், பாதுகாப்பு துறைக்கான உபகரணங்கள், மருத்துவ துறை சார்ந்த ஊசி மருந்துகள் மற்றும் இதர மருந்து பொருட்கள் தயாரிப்பு, தோல் அல்லாத காலணிகள் உற்பத்தி, எரிசக்தி துறை சார்ந்த புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியுடன் பசுமை ஹைட்ரஜன், பசுமை அம்மோனியா உற்பத்தி, மின்வாகனங்கள் மற்றும் தொலைதொடர்பு நெட்வொர்க்குகள் குறித்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு போன்ற பல்வேறு துறைகளை உள்ளடக்கியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் டாடா குழுமத்தின் துணை நிறுவனமான டாடா மோட்டார் லிமிடெட் ரூ.9,000 கோடியில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பாக்ஸ்கான் குழுமத்தின் துணை நிறுவனமான யூசான் டெக்லானஜி (இந்தியா) பிரைவேட் லிமிடெட் ரூ.13,180 கோடி முதலீட்டில் 14,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலும், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் பிஎஸ்ஜி குழுமத்தின் துணை நிறுவனமான லீப் கீரின் எனர்ஜி பிரைவேட் லிமிடெட் ரூ.10,375 கோடி முதலீட்டில் 300 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலும், அரியலூர் மாவட்டத்தில் தைவான் நாட்டை சேர்ந்த டீன் ஷூஸ் குழுமத்தின் துணை நிறுவனமான ப்ரீடிரெண்ட் இன்டஸ்ட்ரியல் இந்தியா பிரைவேட் லிமிடெட் ரூ.1000 கோடி முதலீட்டில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கேன்ஸ் சர்க்யூட்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ரூ.1,395 கோடி முதலீட்டில் 1,033 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் வகையிலும், கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட் ரூ.612 கோடி முதலீட்டில் 1,200 பேருக்கு வேலைவாய்ப்பு என 14 புதிய முதலீடுகளுக்கான ஒப்புதல் அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ளது.

இதன்மூலம் மொத்தம் ரூ.38,600 கோடி மதிப்பிலான திட்டம் மூலம் 46,931 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். இந்த முதலீடுகளுக்கான ஒப்புதல் அமைச்சரவை கூட்டத்தில் வழங்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, முதலீடுகள் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் தென் மாவட்டங்களாக இருக்கக்கூடிய தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம் போன்ற மாவட்டங்கள், காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு மாவட்டங்கள் மற்றும் அருகே இருக்கக்கூடிய ராணிப்பேட்டை மாவட்டம் ஆகிய மாவட்டங்களில் பரவலாக இத்தகைய முதலீடுகள் இன்றைக்கு வந்திருக்கிறது. தமிழ்நாட்டில் படித்த தகுதியானவர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக இருக்கிறது. எனவே, அவர்களுக்கான வேலைவாய்ப்புகள் பல துறைகளிலும் உருவாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

You may also like

Leave a Comment

19 − six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi