இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபிக் அமர்வில் நிலுவையில் உள்ளது. இந்நிலையில், இந்த வழக்கில் சமூக நலத்துறை செயலாளர் ஜெயஸ்ரீ முரளிதரன் சார்பில் அரசு வழக்கறிஞர் எட்வின் பிரபாகர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார். அதில், தமிழகம் முழுவதும் சுமார் 2028 பெண்கள் தங்கும் விடுதி சமூகநலத்துறையால் அமைக்கப்பட்டு, அதில் 1,07,594 பெண்களுக்கு பாதுகாப்பான இருப்பிடம் வழங்கப்பட்டுள்ளது. கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் வேலை பார்க்கும் பெண்களுக்காக அமைக்கப்பட்ட 11 மையங்களில் 500க்கும் மேற்பட்டோர் தங்கியுள்ளனர்.
பெண்கள் விடுதியில், ஒரு நாள், ஒருவாரம், மாதம் முழுவதும் தங்குவதற்கு என்று பல்வேறு வசதிகளும், சிசிடிவி பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் நிதியுடன் தனியார் தொண்டு நிறுவனங்களுடன் இணைந்து 50க்கும் மேற்பட்ட விடுதிகள் நடத்தப்பட்டு வருகின்றன. நிர்பயா நிதி மூலம் பெண்களுக்கு பொது இடங்களில் பாதுகாப்பு, பெண்கள் உதவிக்கு இலவச தொலைபேசி மையம் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. பெண்களின் பாதுகாப்பிற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்கள் மூலமாக அதிகபட்ச நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது எனகூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.