தமிழகத்தில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த விவகாரம் தொடர்பாக ஆவணங்களை ஆய்வு செய்த என்ஐஏ அதிகாரிகள்

சென்னை: தமிழகத்தில் தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆள் சேர்த்த விவகாரம் தொடர்பாக என்ஐஏ அதிகாரிகள் 10 இடங்களில் நேற்று சோதனை நடத்தி இருந்த நிலையில், பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களை தொழில்நுட்ப நிபுணர்கள் உதவியுடன் என்ஐஏ அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். சமீபத்தில் ஒரு யூ-டியூப் சேனலில், தடை செய்யப்பட்ட ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகள் இருந்ததை சென்னை போலீஸார் கண்டறிந்தனர். இதுதொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் உள்ள சைபர் க்ரைம் போலீஸார் துப்பு துலக்கினர். இதில், சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த ஹமீது உசேன் என்பவர், ‘டாக்டர் ஹமீது உசேன் டாக்ஸ்’ என்ற பெயரில் யூ-டியூப் சேனல் நடத்தி வந்ததும், அதில், தடை செய்யப்பட்ட தீவிரவாத இயக்கத்துக்கு ஆதரவாக பேசி, மூளைச் சலவை செய்து இளைஞர்களை திரட்டி வந்ததும் தெரியவந்தது.

ராயப்பேட்டை ஜான்ஜானிக்கான் சாலையில் இதற்காக அலுவலகம் அமைத்து ஒவ்வொரு ஞாயிறும் கூட்டம் நடத்தி, தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவான கருத்துகளை பரப்பி வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. இதுதொடர்பாக சென்னை போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஹமீது உசேன், அவரது சகோதரர் அப்துல் ரகுமான் உட்பட 6 பேரை கைது செய்தனர். கவுரவ பேராசிரியராக பணியாற்றி வந்த ஹமீது உசேன், அதை விட்டுவிட்டு, ஹிஸ்ப்-உத்-தஹ்ரிர் இயக்க ஆதரவாக செயல்பட்டுவந்தார் என்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மேற்கொண்டது.

முதல்கட்டமாக, ஹமீது உசேன் உள்ளிட்ட 6 பேரிடமும் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் தமிழகத்தில் 10 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர். சென்னை ராயப்பேட்டையில் உள்ள குடியிருப்பு, தாம்பரம் அடுத்த முடிச்சூர் இபி காலனி பகுதியில் உள்ள கபீர் அகமது வீடு, ஈரோடு பெரியார் நகர் அடுத்த கருப்பண்ணசாமி கோயில் வீதியில் உள்ள மெக்கானிக் முகமது இசாக் வீடு, ஈரோடு பூந்துறை ரோடு அசோக் நகர் 6-வது வீதியில் உள்ள சர்புதீன் வீடு, தஞ்சாவூர் குழந்தையம்மாள் நகரில் உள்ள அகமது வீடு, தஞ்சாவூர் அடுத்த மானாங்கோரையில் உள்ள ஷேக் அலாவுதீன் வீடு, புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அடுத்த மண்டையூர் வடகாட்டில் ரபிபுல்லா என்பவரது பண்ணை வீடு ஆகிய இடங்களில் சோதனை நடந்தது. திருச்சி சுப்பிரமணியபுரத்தில் ஜமால் முகமது என்பவரது வீட்டில் தங்கியிருந்த தஞ்சை மாவட்டம் சாலியமங்கலத்தை சேர்ந்த அப்துல் ரகுமானிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

பின்னர், அவரை சாலியமங்கலம் அழைத்துசென்று அவரது வீடு, முஜிபுர் ரகுமான் என்பவரது வீடுகளில் சோதனை நடத்தினர். பின்னர், அப்துல் ரகுமான்(26), முஜிபுர் ரகுமான்(45) ஆகிய இருவரையும் என்ஐஏ அதிகாரிகள் கைது செய்து, சென்னைக்கு அழைத்துச் சென்றனர். சோதனையில், செல்போன், சிம்கார்டு, பென்டிரைவ், லேப்டாப் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டுள்ளன. இவற்றை என்ஐஏ அதிகாரிகள் தொழில்நுட்ப நிபுணர்கள் உதவியுடன் தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக என்ஐஏ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர வேறு ஏதேனும் தீவிரவாத அமைப்புகளுக்கு யாரேனும் சட்ட விரோதமாக ஆள் சேர்த்து வருகின்றனரா என்ற கோணத்திலும் என்ஐஏ ரகசிய புலனாய்வை தீவிரப்படுத்தி உள்ளது.

Related posts

அடுத்த 20 ஆண்டுகளுக்கு பாஜக ஆட்சி தான்: மாநிலங்களவையில் பிரதமர் மோடி பேச்சு

தமிழகத்தில் ஜூலை 9 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

3 குற்றவியல் சட்டங்களை எதிர்த்த வழக்கில் ஜூலை 23-க்குள் பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு