தெருவோர கடைகளுக்கான குழு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகராட்சியிலும் அமைக்கப்பட்டுள்ளதா?: தமிழக அரசு பதில் தர ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: தெருவோர கடைகளுக்கான குழு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகராட்சியிலும் அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனர் பதில் அளிக்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுர மாவட்டத்தில் தெருவோர கடைகளில் இருந்து பணம் வசூலிப்பதற்கான ஒப்பந்தம் மார்ச் 15, 2023ல் நடைபெற்று, மயில்வாகனம் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர், ஒப்பந்தம் வெளிப்படை தன்மையுடன் நடைபெறவில்லை. எனவே இதை ரத்து செய்ய வேண்டும் என ஜெயபாரத் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்கிறார்.

இதேநிலையில் மயில்வாகனம் ஏப்ரல் 19ம் தேதி ஒப்பந்தத்திற்கான பணத்தில் ரூ.57,14,408 செலுத்தியதாகவும், மீதமுள்ள தொகையை ஜூன் 1, 2023க்குள் கட்ட வேண்டும் என ராமநாதபுரம் நகராட்சி வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என மனுத்தாக்கல் செய்தார். இந்த இரு மனுக்களும் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி புகழேந்தி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி, மயில்வாகனம் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள மீதி தொகை ரூ.34,78,536 ஜூலை 5, 2023ல் கட்டியதால் அவருடைய வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என தெரிவித்தார்.

இந்த ஒப்பந்தம் ராமநாதபுரம் நகராட்சியில் தெருவோரக் கடைகளுக்கான வாடகை வசூல் செய்வதற்கான உரிமத்திற்கானது. ஒப்பந்த அறிவிப்பில் தெருவோரக் கடைகள் எந்த இடத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்ற விபரம் இடம்பெறவில்லை. மேலும் வாடகை எவ்வளவு என்று விபரமும் இடம்பெறவில்லை. ஆனால் மிகப்பெரிய போட்டியின் நடுவே மயில்வாகனம் என்பவர் இந்த ஒப்பந்தத்தை ரூ.91,92,944 செலுத்தி எடுத்துள்ளார். தெருவோர கடைகளுக்கான சட்டம் மற்றும் விதிமுறைகளின் படி ராமநாதபுரம் நகராட்சி தெருவோர கடைகளுக்கான இடம் மற்றும் தெருவோர கடைகள் இல்லாத இடம் எது என்பதை அடையாளம் காண வேண்டும் என கூறினார்.

மேலும், தெருவோர கடைகளுக்கான சட்டம், விதிமுறைகளை மீறி எத்தனை நகராட்சியில் ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது? தெருவோர கடைகள் அமைப்பதற்கான இடம் என தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நகராட்சியிலும் அடையாளம் காணப்பட்டுள்ளதா? நகராட்சிகளில் இருந்து தெருவோர கடைகளுக்கான சான்று வழங்கப்பட்டுள்ளதா ? சான்றிதழ் வழங்காமலும், தெருவோர கடைகளுக்கான எண்ணிக்கை இல்லாமலும், வாடகை நிர்ணயம் செய்யாமல் எவ்வாறு ஒப்பந்ததாரர் பணம் வசூலிக்கிறார்? என்று நீதிபதி சரமாரி கேள்வி எழுப்பினார். மேற்கண்ட அனைத்து கேள்விகளுக்கும் தமிழ்நாடு நகராட்சி நிர்வாக இயக்குனர் பதில் அளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூலை 27ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.

Related posts

தமிழ்நாட்டின் வரலாற்றில் இன்று மகிழ்ச்சி மிக்க நாள்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!

பெரியகுளம் பகுதியில் புகையிலை பொருட்கள் விற்ற கடைகளுக்கு சீல்

பூவிருந்தவல்லி அருகே மின்கம்பி பதிப்பதற்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்து