தமிழகம் முழுவதும் வரும் 15ம் தேதி 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் : அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை: தமிழகம் முழுவதும் வரும் 15ம் தேதி 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கிண்டி அரிமா சங்க பள்ளி வளாகத்தில் 324கே மாவட்ட அரிமா சங்கம் மற்றும் அப்போலோ மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இலவச இதயம் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை முகாமினை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் தமிழக அரசு உடன் இணைந்து பல தொண்டு நிறுவனங்கள் மழைக்கால சிறப்பு முகாம் நடத்தி வருகிறார்கள். அந்த வகையில் அரிமா சங்கம் மற்றும் அப்போலோ மருத்துவமனை சார்பில் நடைபெற்ற இலவச இதயம் மற்றும் பொது மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்று வருகிறது. ஒரு ஊரில் அல்லது ஒரு தெருவில் ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு காய்ச்சல் ஏற்பட்டால் அங்கு சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது. இதுவரை 7 இறப்புகள் ஏற்பட்டுள்ளது. அதுவும் சுயசிகிச்சை எடுத்துக்கொண்டதால் தான் இந்த இறப்பு ஏற்பட்டது. பருவமழை தொடங்க உள்ளதால் மக்கள் கொசு உற்பத்தி தடுக்க அரசுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும். மேலும் பருவமழை காய்ச்சலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் வரும் 15ம் தேதி 1000 இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

சென்னையில் மட்டும் 100 இடங்களிலும் தமிழகத்தில் உள்ள மற்ற இடங்களில் 900 மருத்துவ முகாம் நடைபெற உள்ளது. தமிழகத்தில் உள்ள மகத்தான திட்டம் என்றால் அது மக்களை தேடி மருத்துவம் ஆகும். இது வரை 1,96,77,571 பேர் இந்த திட்டம் மூலம் பயனடைந்துள்ளனர். இது புகழ்பெற்ற திட்டமாக மாறியுள்ளதால் ஐநா சபை சார்பில் விருது வழங்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமையில் நடைபெற்ற கதர் கிராமத் தொழில் வாரியத்தின் முன்னேற்றத்திற்கான ஆய்வுக் கூட்டம்

ஈரோட்டில் கோயில் வளாகத்தில் 10 பைக்குகள் தீயில் எரிந்து நாசம்: போலீசார் விசாரணை

ரயிலில் கடத்திய ரூ.28 லட்சம் ஹவாலா பணம் சிக்கியது: ஆந்திராவை சேர்ந்தவர் கைது