சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை இன்று தலைமைச் செயலகத்தில், ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யங் லியு சந்தித்து தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் நிறுவனம் மேற்கொண்டு வரும் புதிய முதலீடுகள் குறித்துப் பேசினார்.
இச்சந்திப்பின்போது, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, இ.ஆ.ப., தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. ச. கிருஷ்ணன், இ.ஆ.ப., வழிகாட்டி நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் மற்றும் தலைமை செயல் அலுவலர் திரு. வே.விஷ்ணு, இ.ஆ.ப., ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் Chief Stratgegy Officer (Semiconductor) டாக்டர் சைய் சியாங் (Dr. SY Chiang), பொது மேலாளர் (குறைகடத்தி) டாக்டர் பாப் சென்’ (Dr. Bob Chen), தலைமை அலுவலக இயக்குநர் திரு. செந்தில் குமார், இந்திய பிரதிநிதி திரு. பி. லீ (Mr. V. Lee), இணை மேலாளர் ஹன்னா வேங் (Ms. Hannah Wang) மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
தமிழ்நாட்டில் ரூ.1,600 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலை; ஒப்பந்தம் கையெழுத்து
தமிழ்நாட்டில் ரூ.1,600 கோடி முதலீட்டில் புதிய தொழிற்சாலையை ஃபாக்ஸ்கான் நிறுவனம் அமைக்க உள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஃபாக்ஸ்கான் நிறுவன தலைவர் யங் லியு ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. ஃபாக்ஸ்கானின் துணை நிறுவனமான ஃபாக்ஸ்கான் இன்டஸ்ட்ரியல் இன்டர்நெட் நிறுவனம் புதிய ஆலையை அமைக்கிறது. புதிய ஆலையை அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் தமிழ்நாடு அரசும், ஃபாக்ஸ்கான் நிறுவனமும் கையெழுத்திட்டன.
ஃபாக்ஸ்கானின் புதிய ஆலை மூலம் மொபைல் போன் உதிரி பாகங்கள் உற்பத்தி செய்யப்பட உள்ளன. ஃபாக்ஸ்கான் இன்டஸ்ட்ரியல் இன்டர்நெட் நிறுவனம் மூலம் புதிதாக 6,000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். புதிய ஆலை காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைய உள்ளதாக நிறுவன அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே சென்னையில் ஆப்பிள் நிறுவனத்துக்கான ஐ போன் தயாரிக்கும் ஃபாக்ஸ்கான் ஆலையில் 35,000 பேர் பணிபுரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.