தமிழகத்தை பொறுத்தவரை பொது சாலை போக்குவரத்தில் பேருந்துகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. பல கிராமங்களுக்கு முறையான பேருந்து வசதிகள் இருந்தாலும், குறுகலான சாலைகளை கொண்ட கிராமங்களுக்கு பேருந்துகளை இயக்குவதில் பிரச்னைகள் இருந்தன. இதனை கருத்தில் ெகாண்டு கடந்த 1997ல் திமுக ஆட்சியின்போது, அப்போது முதல்வராக இருந்த கலைஞர் மினி பஸ் திட்டத்தை அறிமுகம் செய்தார். இதன்மூலம் கிராமங்களுக்கும் பேருந்து சேவை விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த மினி பஸ்கள் 16 கிமீ வரை இதர பேருந்து சேவையில்லாத வழித்தடம், 4 கிமீ பிரதான சாலைகளில் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. பேருந்துகள் இல்லாத சேவைத்தடத்தை அதிகரிக்க வேண்டுமென்ற பொதுமக்களின் கோரிக்கையை தொடர்ந்து, 16 கிமீ தூரமானது 20 கிமீ வரை அதிகரித்து அனுமதிக்கப்பட்டது. இதனால் தங்களது கிராமங்களுக்கும் பேருந்து சேவை கிடைத்த மகிழ்ச்சியில் பொதுமக்கள் திளைத்தனர். கடந்த 2013 அதிமுக ஆட்சியின்போது ஸ்மால் பஸ் என்ற திட்டம் சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் அறிமுகம் செய்யப்பட்டது.
பேருந்தில் கட்சி சின்னம், அறிவித்ததை விட குறைந்த எண்ணிக்கையிலான பேருந்துகள், சேவை வசதி குறைபாடு உள்ளிட்ட காரணங்களால் இத்திட்டம் வெற்றி அடையவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தபின் கிராமங்களில் சாலை வசதி மேம்படுத்தப்பட்டதை தொடர்ந்து, கிராமப்புறங்களுக்கும் பேருந்துகள் சென்று வந்தன. இருப்பினும், கிராமப்புறங்களில் குறைந்த அளவிலான மினி பஸ் சேவை தொடர்ந்து செயல்பட்டு வந்தது. இத்திட்டத்தை விரிவாக்கம் செய்து கிராமங்களுக்கு கூடுதல் பேருந்து வசதிகளை செய்ய வேண்டுமென அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை எழுப்பியிருந்தனர். இதனையடுத்து மினி பஸ் திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்கான வரைவு அறிக்கை-2024ஐ தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. இதன்படி, 20 கிமீ தூரமானது 25 கிமீ என மாற்றப்பட்டுள்ளது. 17 கிமீ பேருந்து சேவையில்லா வழித்தடம், 8 கிமீ பேருந்து சேவை உள்ள வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது. அதாவது, 70 சதவீதம் பேருந்துகள் இல்லாதவழித்தடத்திலேயே மினி பஸ்கள் இயக்கப்பட உள்ளன. இதன்மூலம் 100 குடும்பங்கள் இருக்கும் ஊருக்கும் பேருந்து வசதி இருக்கும்.
25 பேர் வரை பயணிக்கலாம். சென்னை, மதுரை உள்ளிட்ட பிற மாநகராட்சிகளில் சில பகுதிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகள் என தமிழகம் முழுவதும் இந்த சேவை செயல்பட உள்ளது வரவேற்கத்தக்கது. பொதுமக்கள் இதுதொடர்பான தங்களது கருத்துக்களை ஜூலை 14ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, அரசு நகரப்பேருந்துகளில் பெண்களுக்கு இலவச விடியல் பயணத்திட்டத்தை, முதல்வரானதும் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தினார். தற்போது வரை இத்திட்டத்தின் மூலம், சுமார் 450 கோடிக்கு மேல் இலவச பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவிக்கிறது. இதன்மூலம் ஒரு குடும்பத்திற்கு மாதம் ஒன்றுக்கு ரூ.800 – 1,000 வரை மிச்சமாவதாகவும், ஒரு நாளைக்கு சராசரியாக 50 லட்சம் பேர் இலவசமாக பயணிப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. குறிப்பாக, பள்ளி, கல்லூரி செல்லும் மாணவிகள், வேலைக்கு செல்லும் நடுத்தர, ஏழை எளிய பெண்களுக்கு இத்திட்டம் வரப்பிரசாதமாக உள்ளது. தற்போது மினி பஸ் சேவை விரிவாக்க திட்டத்தின் மூலம், கிராம மக்கள் மேலும் பயனடைவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.