சென்னை: அகில இந்திய அளவிலான மகளிர் காவலர் துப்பாக்கி சுடுதல் போட்டியை செங்கல்பட்டு மாவட்டம், ஒத்திவாக்கத்தில் உள்ள தமிழ்நாடு காவல்துறை அதிரடிப்படை மைதானத்தில் கடந்த 15ம் தேதி தமிழ்நாடு காவல்துறை டிஜிபி சங்கர் ஜிவால் தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் காவல்துறையினர், மத்திய காவல் அமைப்பினர் என 30 அணிகளை சேர்ந்த சுமார் 453 துப்பாக்கி சுடும் வீராங்கனைகள் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டனர்.
கடந்த 16ம் தேதி முதல் 19ம் தேதி வரையிலான 5 நாட்கள் நடந்த போட்டியில் எல்லை பாதுகாப்பு படை வீராங்கனைகள் முதல் இடம்பெற்றனர். இரண்டாம் இடத்தை தமிழ்நாடு காவல்துறை அணி தங்கம் உள்ளிட்ட 12 பதக்கங்கள் பெற்றது. மேலும், ஒட்டுமொத்த போட்டியில் தமிழ்நாடு காவல்துறை அணி முதல் இடத்தை பிடித்தது.
அதனை தொடர்ந்து நேற்று துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற வீராங்கனைகளுக்கு எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் தலைமை செயலாளர் சிவ் தாஸ் மீனா பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் சென்னை பெருநகர காவல் துறை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர், கடலோர பாதுகாப்பு குழுமம் கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல், தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் அமல் ராஜ் உள்ளிட்ட காவல்துறை உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.