ஈரோடு: தமிழகத்தில் எந்த இடத்திலும் அனுமதியில்லாமல் மதுபான பார் செயல்படவில்லை என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார். முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு வீட்டு வசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைதுறை அமைச்சர் முத்துசாமி ஈரோடு தெற்கு மாவட்ட கழகம் சார்பாக பெரிய சேமூர் பகுதி 11வது வார்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் முத்துசாமி, தமிழகத்தில் எந்த இடத்திலும் அனுமதியில்லாமல் மதுபான பார் செயல்படவில்லை.
நீதிமன்றம் வழிமுறைகளின் அடிப்படையில் எவ்வித தவறும் நடக்காமல் பார்களுக்கு அனுமதி வழங்கப்படும். டெட்ரா பேக் குறித்து அண்டை மாநிலங்களில் ஆய்வுசெய்து வருகிறோம்; அரசியல் கட்சிகளின் கருத்தை கேட்டு வருகிறோம். மதுபானம் கூடுதல் விலைக்கு விற்கப்படுவதை 99 சதவீதம் தடுத்துள்ளோம் என குறிப்பிட்டார். மேலும் மதுபான விற்பனை ரசீது வழங்குவதற்கான நடவடிக்கை விரைவில் தொடங்கப்பட உள்ளது என அமைச்சர் முத்துசாமி செய்தியாளர்களிடம் கூறினார்.