சென்னை: பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை மானிய கோரிக்கை மீது அமைச்சர் பேசியதாவது: அடுத்தவன் சொத்தை அபகரித்தால் ஆண்டவன்தான் கேட்க வேண்டும். ஆண்டவன் சொத்தை அபகரித்தால் ஆள்பவர்தானே கேட்க வேண்டும். அந்த வகையில், திராவிடமாடல் ஆட்சியில் இதுவரை ரூ.6,004 கோடி மதிப்பிலான நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதற்கு முந்தைய 10 ஆண்டு கால ஆட்சியில் மொத்தம் ரூ.3,819 கோடி மதிப்பிலான நிலங்கள் மட்டுமே மீட்கப்பட்டன. கடந்த 3 ஆண்டுகளில் தெய்வங்களாக இருக்கின்ற சிலைகள், கலைப்பொருட்கள் மொத்தம் 420 இனங்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 8,962 கோவில் திருப்பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
மொத்த திருப்பணிகள் 20,166, மதிப்பீட்டுத் தொகை ரூ.5,097 கோடி. இதுவரை நிறைவுற்ற பணிகள் 7,648. நமது முதல்வரின் காலம் பக்தர்களின் நற்காலம். இந்திய ஒன்றியத்திலேயே தமிழ்நாட்டில்தான் கோயில்கள் அதிகம். காரணம் நாம் கோயில்களை வைத்து கலை வளர்த்தோம், கலவரத்தை வளர்க்கவில்லை. பண்பாட்டை வளர்த்தோம், பாகுபாட்டை வளர்க்கவில்லை. எந்த மதம் இருந்தாலும் அன்பு கொள்வதே இந்து மதம். கடவுளை கோயிலில் வைத்து வணங்கலாம். இறைவனிடம் வரம் கேளுங்கள். இறைவனை வைத்து வாக்கு கேட்காதீர்கள். அன்னைத் தமிழ்நாட்டில் ஆன்மீகத்தை அரசியலாக்கும் சூழ்ச்சிகள் தகர்க்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.