கேரள மாநிலத்தில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை தாமதமாக தொடங்கி உள்ளது. இதன் காரணமாக பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. தற்போது தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.
கனமழையின்போது, பல இடங்களில் நிலச்சரிவு மற்றும் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேரள பேரிடர் மேலாண்மை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் அவசரகால அறிவுறுத்தல்களை பின்பற்ற வேண்டும் எனவும் கடல் தாக்குதலுக்குள்ளாகும் பகுதிகளில் வசிப்பவர்கள் நிவாரண முகாம்களுக்கு செல்ல தயாராக இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் தமிழ்நாடு கேரளாவை இணைக்கும் கொச்சி தேசிய நெடுஞ்சாலையில் கேப் ரோடு என்ற இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் மூணாறு செல்லும் சாலையில் பெரிய பாறைகள் சரிந்து கிடப்பதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.