தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்றுமுன்தினம் சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை இடைநிறுத்தி வெளியில் சென்றார். மேலும் தேசியகீதம் பாடுவதற்கு முன் சட்டமன்றத்தை அவமதிக்கும் விதமாக வெளியே சென்றார். தொடர்ந்து சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்கள், ஆளுநர் உரையை புறக்கணித்து வருவது பொதுமக்களிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்துவதோடு ஆளுநர் மீதான பெரும் கண்டனத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மதுரை புறநகர் தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் விமல், ஆளுநர் ரவியை கண்டித்து ‘‘கெளம்பு! கெளம்பு!! கௌம்பு!!! தமிழ்த்தாய் வாழ்த்தையும் தேசிய கீதத்தையும் அவமதித்த திரு. ஆளுநரே! தமிழ்நாட்டை விட்டு கௌம்பு…’’ என்ற வாசகங்களுடன் கெட் அவுட் ரவி என்ற ஹேஷ்டேக்குடன் டிரெண்டிங் செய்யும் விதமாக மதுரையில் திருப்பரங்குன்றம், அவனியாபுரம், வில்லாபுரம், ஜெய்ஹிந்த்புரம், திருநகர், திருமங்கலம், நாகமலை புதுக்கோட்டை உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் போஸ்டர்கள் ஓட்டப்பட்டிருக்கிறது. இந்த போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டிருப்பதுடன், பொதுமக்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
* அரவக்குறிச்சி அரவேக்காடு அண்ணாமலைக்கு எச்சரிக்கை: அதிமுக மிரட்டல்
சிவங்கை மாவட்டம் முழுவதும் அதிமுக மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி துணை செயலாளர் மணிமாறன் என்பவர் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளார். அந்த போஸ்டரில், ‘‘அறிஞர் அண்ணா, புரட்சி தலைவி ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசிய அண்ணாமலை பதவி வகிக்கும் பாஜ உடன் தன்மானத்தை விட்டு கூட்டணி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. அதிமுகவின் மதிப்பு தெரியாமல் லேகியம் விற்பவர் போல அண்ணாமலை பேசுகிறார். அதிமுகவை அழிக்க அண்ணாமலை மட்டுமல்ல. அவர் அப்பா வந்தாலும் கூட முடியாது, அரவக்குறிச்சி அரவேக்காடு அண்ணாமலையை இரண்டரை கோடி தொண்டர்கள் சார்பாக எச்சரிக்கிறோம் என்றும் எடப்பாடி, உதயகுமார் பேச்சிற்கு நன்றி தெரிவித்து வரவேற்கிறோம்’’ என கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து மணிமாறன் கூறுகையில், ‘‘ அண்ணாமலை தொடர்ந்து அதிமுகவை விமர்சித்தால் தமிழகம் முழுவதும் அதிமுகவினர் அவருக்கு எதிராக போஸ்டர் ஒட்டுவோம்’’ என்றார். இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன் பாஜ மாநில பொதுச்செயலாளர் ராம.சீனிவாசனை கண்டித்து, திருப்புவனத்தில் அதிமுக நிர்வாகிகள் போஸ்டர் ஓட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.