இவர், நேற்று டிவிட்டரில் ஒரு பதிவு போட்டார். அதில், பள்ளி மாணவிகள், கட்டிடம் கட்டித்தரக்கோரி சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர். இந்த வீடியோவை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு டேக் செய்து, குறைகளை கூறியிருந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்த டிவிட்டரை பார்த்ததும் விசாரணை நடத்த உத்தரவிட்டார். அப்போது நடத்திய விசாணையில், புதுச்சேரி மாநிலத்தில் நடந்த பள்ளி மாணவிகளின் மறியல் போராட்டத்தை தமிழகத்தில் நடந்தது போல அமர் பிரசாத் ரெட்டி பொய் செய்தி பரப்பியது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மீது திமுகவினர் புகார் செய்து விடுவார்களோ என்ற பயத்தில் அந்த டிவிட்டை உடனே டெலிட் செய்து விட்டார். இருப்பினும் அவரது வார் ரூம் சார்பில் அமர்பிரசாத் ரெட்டியின் டிவிட் ஆயிரக்கணக்கில் பரவிவிட்டது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு வட இந்திய தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக பொய் செய்தி பரப்பிய நபர்கள் மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்தது. இந்த கைது நடவடிக்கையை உச்ச நீதிமன்றமும் பாராட்டியதோடு, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் கூட தொடர்ந்து பாஜவினர் இந்த பொய் பிரசாரங்களை தொடர்ந்து செய்து வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. அதேபோல, தஞ்சாவூரைச் சேர்ந்த மாணவி லாவண்யா மத மாற்றத்தின் காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்ற பொய் செய்தியை பாஜ தலைவர்கள் பரப்பினர். போராட்டம் நடத்தினர். ஆனால் அது உண்மை இல்லை என்று தெரியவந்தது. பணம் கேட்டு மிரட்டுவதற்காக உள்ளூர் பாஜவினர் செய்த செயல் என்று மற்றொரு ஆடியோ வெளியானது மூலம் தெரியவந்து, அந்த பாஜ பிரமுகர் கைது செய்யப்பட்டார். மேலும் மாணவி மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, வழக்கு மாற்றப்பட்டது. ஆனால் இந்த வழக்கில், இதுவரை யார் மீதும் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
தேசிய மனித உரிமைகள் ஆணையம், தேசிய குழந்தைகள் நல ஆணையமும் விசாரித்தது. இதுவரை முடிவு வெளியாகவில்லை. அதேபோலத்தான், கடலூரில் நடந்த ஒரு சம்பவத்தை தற்போது பாஜ மாநில செயலாளராக உள்ள சூர்யா, மதுரையில் நடந்ததுபோல ஒரு அறிக்கை வெளியிட்டு, பொய்யான செய்தி பரப்பியதற்காக காவல்துறையால் தற்போது கைது செய்யப்பட்டள்ளார். இதனால் தொடர்ந்து பாஜவினர் இதுபோன்ற பொய்யான தகவல்களை பரப்பி பதற்றத்தை உருவாக்கி வருவதால், போலீசார் கைது நடவடிக்கைகளை தொடங்கியுள்ளனர். இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.