தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது: ஐகோர்ட்டில் காவல்துறை தகவல்

சென்னை: சென்னையில் குடிசைவாசிகளை அப்புறப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 2017ம் ஆண்டு பெண்ணுரிமை இயக்கம் என்ற அமைப்பின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, குடிசைவாசிகளுக்கு பெரும்பாக்கம், துரைப்பாக்கம் உள்ளிட்ட 4 இடங்களில் மாற்று இடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அங்கு போதுமான அடிப்படை வசதிகள் இல்லை என்றும் மனுதாரர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், பெரும்பாக்கம் துரைப்பாக்கம் உள்ளிட்ட 4 இடங்களில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்குமாறு வழக்கறிஞர் ஆணையரை நியமித்து 2018ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.அதன்படி, இப்பகுதிகளை ஆய்வு செய்து வழக்கறிஞர் ஆணையர் அளித்த அறிக்கையில், இந்த பகுதிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் நடமாட்டம் தாராளமாக இருப்பதாக குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், வழக்கறிஞர் ஆணையர் அறிக்கையில் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பதாக சுட்டிக்காட்டி இருக்கிறார். மேலும், போதை மறுவாழ்வு இல்லம் அமைக்க வேண்டும் என்று வழக்கறிஞர் ஆணையர் அளித்த அறிக்கையின் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தமிழகத்தில் எல்லா இடங்களிலும் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது குறித்து காவல்துறையினருக்கு தெரியுமா? தெரியாதா? பள்ளி குழந்தைகள் இதனால் பாதிக்கப்படுகிறார்கள். போதைப் பொருள் வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு ஏதேனும் உள்ளதா? இல்லையா? இந்த வழக்குகளை சுதந்திரமான ஒரு அமைப்பின் வசம் ஒப்படைக்கலாமா? என்று காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த காவல்துறை தரப்பு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர்.முனியப்பராஜ், போதைப்பொருள் கடத்தல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. குற்றங்கள் எண்ணிக்கை குறைந்துள்ளன. இந்தப் பகுதிகளில் ஏராளமான காவல்துறையினரும் பணிக்கு அமர்த்தப்பட்டு இருக்கிறார்கள். வழக்கறிஞர் ஆணையர் அறிக்கையின் அடிப்படையில் எடுக்க உள்ள நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்கிறோம் என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள், வழக்கறிஞர் ஆணையர் அறிக்கையை அமல்படுத்துவது குறித்து அரசின் கருத்தை அறிந்து தெரிவிக்க வேண்டும். இந்தப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி கொடுப்பது தொடர்பாக, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவும், தாலுகா சட்டப்பணிகள் ஆணைக்குழுவும் நேரில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை செப்டம்பர் 9ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Related posts

வேளச்சேரியில் நிலம் பத்திரப்பதிவில் மோசடி: முன்னாள் அதிமுக கவுன்சிலர் வீட்டில் ரெய்டு

திமுக பிளக்ஸ் பேனர் கிழிப்பு: அதிமுக நிர்வாகிகள் 6 பேர் கைது

சிவகங்கையில் விஷவாயு தாக்கி இருவர் உயிரிழப்பு