சென்னை: டெங்கு பாதிப்பு கட்டுக்குள் உள்ளது என சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை, அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு, சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.1.5 கோடி மதிப்பீட்டில் பார்வையாளர்கள் தங்குமிடம் கட்ட இடம் தேர்வு செய்வதற்கான ஆய்வை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:மதுரவாயல் பகுதியில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 144 வது வட்டத்தை சேர்ந்த, 4 வயது சிறுவன் ரக்சன் டெங்கு பாதிப்பால் மரணமடைந்துள்ளான் சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் மரணடைந்துள்ளது என்பது வருத்தத்திற்குரியது. கடந்த 3 ஆண்டுகளாக டெங்கு பாதிப்புகளை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. நேற்று வரை 253 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3 பேர் டெங்கு பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக தலைமைச் செயலாளர் தலைமையில் உயர் அலுவலர்களுடனான கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடத்தப்படவுள்ளது.