Tuesday, July 2, 2024
Home » தமிழ்நாட்டுக்கு காவிரியில் உரிய நீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

தமிழ்நாட்டுக்கு காவிரியில் உரிய நீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கடும் கண்டனம்

by Suresh

சென்னை: தமிழ்நாட்டுக்கு காவிரியில் உரிய நீர் தர மறுக்கும் கர்நாடக அரசுக்கு ஓ.பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். காவிரி ஆணையம் உத்தரவிட்ட 3,000 கன அடி நீரைக் கூட கர்நாடக திறக்க மறுப்பது கடும் கண்டனத்துக்குரியது என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “காவேரி நதிநீர்ப் பங்கீட்டில் தமிழ்நாட்டிற்கு 205 டி.எம்.சி. அடி நீர் திறந்துவிட வேண்டும் என்ற காவேரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, 192 டி.எம்.சி. அடி நீராக இறுதித் தீர்ப்பில் குறைக்கப்பட்டு, பின்னர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் 177.25 டி.எம்.சி. அடி அளவுக்கு குறைக்கப்பட்டு இறுதி செய்யப்பட்ட நிலையில், அந்தத் தண்ணீரைக்கூட கர்நாடக அரசு தர மறுப்பது உபரி நீரைத்தான் தர முடியும், உரிய நீரை தரமுடியாது என்பதைத்தான் தெளிவுபடுத்துகிறது.

அண்மையில், டெல்லியில் நடைபெற்ற காவேரி நீர் ஒழுங்காற்றுக் குழுக்கூட்டத்தில், தமிழ்நாட்டின் சார்பில் 12,500 கன அடி நீரை தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டுமென்று கோரிக்கை வைத்த நிலையில், இன்று முதல் 15 நாட்களுக்கு வினாடிக்கு 3,000 கன அடி நீரை கர்நாடகா திறந்துவிட வேண்டுமென்று காவேரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டிருப்பது தமிழ்நாட்டிற்கு பெருத்த பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி, தமிழ்நாட்டிற்கு உரிய நீரினை அளிக்கும் அளவுக்கு கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருந்தும், காவேரி நீர் ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ள 3,000 கன அடி நீரை கூட திறந்துவிட முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது கடும் கண்டனத்திற்குரியது.

இது குறித்து கர்நாடக மாநில முதலமைச்சர் தலைமையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று, கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களை சந்தித்த அம்மாநில முதலமைச்சர் தண்ணீர் திறந்துவிடுவதற்கு கர்நாடகாவிடம் தண்ணீர் இல்லை என்றும், இதுகுறித்து காவேரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என்றும், மேகதாது அணைக்கு ஒப்புதல் அளிக்க ஒன்றிய அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வாதிடப்படும் என்றும், இதுகுறித்து சிறப்பு சட்டசபை கூட்டத் தொடர் நடத்தி விவாதிக்கப்படும் என்றும், வேண்டுமென்றே உச்ச நீதிமன்ற உத்தரவை மீறினால்தான் நீதிமன்ற அவமதிப்பு ஏற்படும் என்றும் கூறியிருக்கிறார்.

கர்நாடக அணைகளில் போதிய அளவு தண்ணீர் இருந்தும் தமிழ்நாட்டிற்கு உரிய நீரை திறக்கமுடியாது என்று கூறுவதும், மேகதாது அணை கட்டினால் தண்ணீர் பிரச்சனை வராது என்று கூறுவதும் தமிழ்நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் எதிரான செயல். இப்பொழுதே தமிழ்நாட்டிற்கு உரிய நீரை தர மறுக்கும் கர்நாடக அரசு, மேகதாது அணையை கட்டினால் அதிலும் தண்ணீரை சேமித்து வைத்துக் கொண்டு தமிழ்நாட்டிற்கு உரிய நீரை தர மறுக்கும்.

கர்நாடகத்திற்கு கூடுதலாக தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளவே மேகதாது அணை கட்டப்பட வேண்டும் என்று கர்நாடக அரசு கூறுகிறதே தவிர, தமிழ்நாட்டிற்கு உரிய நீரை தருவதற்காக அல்ல. எனவே, மேகதாது அணை கட்டினால் தண்ணீர் பிரச்சனை வராது என்று கர்நாடக முதலமைச்சர் கூறுவது முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைப்பதற்கு சமம். கர்நாடக அரசின் செயல்பாடுகள் அனைத்துமே நீதிமன்ற அவமதிப்பு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் உரிமையை பாதிக்கும் செயலாகும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் என்பது அனைத்து மாநிலங்களுக்கும் பொதுவானதாக இருக்கின்ற நிலையில், பன்மாநிலங்களுக்கு இடையேயான நதிநீர்ப் பங்கீட்டில் காவேரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பிற்கும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கும் முரணாக கர்நாடக அரசு செயல்படுவது இந்திய அரசமைப்புச் சட்டத்தையே மீறும் செயலாகும்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, தமிழ்நாட்டிற்கு உரிய நீரை பெற்றிட ஏதுவாக, பிரதமரை நேரில் சந்தித்து ஒன்றிய அரசின் மூலமாகவும், சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரை சந்தித்து காங்கிரஸ் மேலிடம் மூலமாகவும் கர்நாடக அரசுக்கு அழுத்தம் தரவும்; காவேரி மேலாண்மை வாரியம் மற்றும் உச்ச நீதிமன்றம் மூலமாக வாதிடவும் முதலமைச்சர் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

You may also like

Leave a Comment

13 + fourteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi