மாநிலம் முழுவதும் 2-வது நாளாக முழுஅளவில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாக போக்குவரத்து கழகம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் மாநகரப் பேருந்துகள் முழு அளவில் வழக்கமான அட்டவணைப்படி இயக்கபடுகின்றன எனவும் பேருந்துகள் இயக்கம் தொடர்பாக பயணிகள் அச்சமின்றி பயணம் மேற்கொள்ளலாம் எனவும் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். சென்னையில் காலை 6 மணி நிலவரப்படி, 2263 (111.75%) பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
கோவை மாவட்டத்தில் 6 மணி நிலவரப்படி 100% அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. மொத்தம் உள்ள 17 பணிமனைகளில் இருந்து காலை 6 மணிக்குள் செல்ல வேண்டிய 570 பேருந்துகள் முழுமையாக இயக்கப்பட்டது. மதுரை கோட்டத்தை உள்ளடக்கிய திண்டுக்கல், தேனி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று காலை 5 மணி நிலவரப்படி 99.07% பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன என போக்குவரத்துத்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 6 பணிமனைகளில் இருந்து 319 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. விழுப்புரம் மாவட்டத்தில் 220 பேருந்துகளில் 205 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதாவது 92 சதவீதம் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. திருவாரூரில் 50 பேருந்துகள் இயக்கப்பட வேண்டிய நிலையில் 19 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. புதுக்கோட்டை மாவட்டத்தில் 9 பணிமனையில் இருந்து 181 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.