சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ்-ஐ மாற்றாததற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுகவினர் வெளிநடப்பு!!

சென்னை : தமிழக சட்டப்பேரவையில் இருந்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் காரணமாக எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர் செல்வம் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சித் துணைத் தலைவராக ஆர்.பி உதயகுமார் தேர்வு செய்யப்பட்டதாக எடப்பாடி அறிவித்தார்.

இந்த நிலையில், அப்போது எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தி சட்டப்பேரவையில் அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு பதில் அளித்த சபாநாயகர் அப்பாவு, இருக்கை விவகாரம் தொடர்பாக ஏற்கனவே நீண்ட விளக்கம் அவையில் கொடுத்துள்ளதாகவும் தயவு செய்து ஒத்துழைப்பு கொடுங்கள் என்றும் அதிமுக உறுப்பினர்களிடம் கேட்டுக் கொண்டார்.

பின்னர் பேசிய பழனிசாமி, “எதிர்க்கட்சி துணைத் தலைவர் தொடர்பாக நாங்கள் விடுத்த கோரிக்கையை இதுவரை ஏற்கவில்லை.மரபு என்ற அடிப்படையில் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை, பெரும்பான்மை உறுப்பினர்களால் தேர்வான உதயகுமாருக்கு வழங்க வேண்டும்.எதிர்க்கட்சி தலைவர் பேசுவது நேரலை செய்யப்படுவதில்லை,’என்றார். அப்போது குறுக்கிட்ட துரைமுருகன், எங்கள் முகத்தைக்கூட நேரலையில் காட்டியது இல்லை. நாள் ஆயிரம் முறை பேசியுள்ளேன்,என்று குறிப்பிட்டார்.

சபாநாயகர் அப்பாவு தொடர்ந்து அவர்களை சமாதானப்படுத்தி விளக்கம் அளித்த போதும் அதனை ஏற்காமல், சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவர் பதவியில் இருந்து ஓபிஎஸ்-ஐ மாற்றாததற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவது அவைகுறிப்பில் இருந்து நீக்கப்படுவதை கண்டித்தும் அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

Related posts

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு; அதிமுக மாஜி அமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் இல்லை: முன்ஜாமீன் மனு குறித்து இன்று பரிசீலனை

விசிக பிரமுகர் சரமாரி வெட்டிக்கொலை: ஆட்டோ டிரைவர் கைது