அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் வாரத்திற்கு இரு பாடவேளைகள் உடற்கல்விக்காக ஒதுக்கப்பட்டிருந்தாலும் கூட, அந்த பாடவேளைகளில் விளையாட்டு கற்பிக்கப்படுவதில்லை. மாறாக, அந்த பாடவேளைகளில் பிற பாடங்கள் கற்பிக்கப்படுகின்றன. பெரும்பான்மையான பள்ளிக்கூடங்களில் விளையாட்டுத் திடல்களே இல்லை. சில பள்ளிகளில் விளையாட்டுத் திடல்கள் இருந்தாலும் வேறு கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை. இப்படிப்பட்ட சூழலில் அரசு பள்ளிகள் இருந்தால், அவற்றில் விளையாட்டுகளை எவ்வாறு வளர்த்தெடுக்க முடியும்?
இவை ஒருபுறமிருக்க தமிழ்நாட்டு கல்விச்சூழலில் இன்னொரு புதிய கலாச்சாரம் தோன்றியிருக்கிறது. விளையாட்டுத்திடல்களும், விளையாட்டுப் பாடமும் இல்லாத பள்ளிக்கூடங்களை தொழில்நுட்பப் பள்ளிகள் என்ற பெயரில் பிற மாநிலங்களைச் சேர்ந்த கல்விக் குழுமங்கள் தொடங்கி வருகின்றன. அந்தப் பள்ளிகளுக்கு எந்த தடையும் இல்லாமல் தமிழ்நாட்டில் அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. சுகமான, சுமையற்ற, விளையாட்டுடன் கூடிய கட்டாயக் கல்வி அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று பா.ம.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. அதற்கு எதிரான நோக்கம் கொண்ட பள்ளிகளை அனுமதிக்கக்கூடாது.
தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் விளையாட்டைக் கட்டாயமாக்க வேண்டும். அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் குறைந்தது 7 விளையாட்டுக்கான கட்டமைப்புகளுடன் விளையாட்டுத் திடல்கள் ஏற்படுத்தப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும். ஆண்டுதோறும் பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ்களும், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படுவதை தமிழ்நாடு அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.