கோவை: தமிழகத்தில் அதிமுகதான் பிரதான எதிர்க்கட்சி என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், வேண்டுமென்றே சிலர் திட்டமிட்டு சொல்வதற்கு நாங்கள் என்ன பதில் சொல்ல முடியும் என்றார்.
“மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே தனித்து போட்டி”
தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை பாதுகாக்கவே தனித்து போட்டியிடுவோம் என்று அறிவித்தோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக வலிமையான கூட்டணியை அமைக்கும் என எடப்பாடி தெரிவித்தார்.
அண்ணாமலைக்கு எடப்பாடி பழனிசாமி பதில்:
நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கும் யாருக்கும் போட்டி என்பதை மக்களிடம் கேளுங்கள்; யார் எதிர்க்கட்சி என்பது மக்களுக்கு தான் நன்றாகத் தெரியும். அண்ணாமலை சொல்வது அவரது கருத்து என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். 2024 தேர்தலில் திமுக-பாஜகவுக்கும்தான் போட்டி என அண்ணாமலை கூறியதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார். யாருக்கு யார் போட்டி என்பது மக்களவைத் தேர்தலின்போது தெரியும் என்றார்.
வேண்டுமென்றே இதுபோல பேசுகிறார் அண்ணாமலை:
வேண்டுமென்றே திட்டமிட்டு இதுபோன்ற கருத்துகளை அண்ணாமலை கூறி வருகிறார். பாஜகவுடன் கூட்டணி இல்லை என்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டோம். மத்தியில் யார் ஆட்சி அமைத்தாலும் மக்கள் பிரச்னைகள் பற்றி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவோம். பல மாநிலங்களில் பிரதமர் வேட்பாளரை முன்வைக்காமலேயே தேர்தலை சந்திக்கின்றனர் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
டி.டி.வி. தினகரன் கட்சி காணாமல் போய்விடும்:
டிடிவி தினகரனை நாங்கள் பொருட்படுத்துவதே இல்லை. வரும் நாடாளுமன்றத் தேர்தலுடன் டிடிவி தினகரனின் அமமுக காணாமல் போய்விடும் என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.