Sunday, September 8, 2024
Home » தமிழகத்தில் 9 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: கோவை – அண்ணாமலை; நீலகிரி – முருகன்; தென்சென்னை – தமிழிசை; எஞ்சியுள்ள 10 தொகுதிக்கு விரைவில் வெளியாகும்

தமிழகத்தில் 9 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: கோவை – அண்ணாமலை; நீலகிரி – முருகன்; தென்சென்னை – தமிழிசை; எஞ்சியுள்ள 10 தொகுதிக்கு விரைவில் வெளியாகும்

by Karthik Yash

சென்னை: தமிழகத்தில் 9 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜ வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கோவையில் அண்ணாமலை, நீலகிரியில் எல்.முருகன், தென்சென்னையில் தமிழிசை சவுந்தரராஜன் களமிறக்கப்பட்டுள்ளனர். நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜ கூட்டணியில் இணைந்துள்ள கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கும் பணி கடந்த 3 நாட்களாக சென்னை பாஜ தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்தது. அதில் பாமகவுக்கு 10 இடங்களும், புதிய நீதிக் கட்சி, ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, தேவநாதன் யாதவின் இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் கட்சிகளுக்கு தலா ஒரு சீட் வழங்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.

தொடர்ந்து அமமுகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் ஓபிஎஸ் மற்றும் தமாகாவுடன் ஒப்பந்தம் இறுதி செய்யப்படவில்லை. தொடர்ந்து இழுபறி நீடித்து வந்தது. இந்நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு பாஜ கூட்டணியில் தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்கான 3வது பட்டியலை பாஜ மேலிடம் நேற்று மாலை வெளியிட்டது. அதில் தமிழகத்திற்கான 9 தொகுதிக்கான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

அதன்படி தென்சென்னையில் முன்னாள் பாஜ தலைவரும், தெலங்கானா, புதுச்சேரி முன்னாள் ஆளுநருமான தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். மத்திய சென்னையில் பாஜ மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம், வேலூரில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், கிருஷ்ணகிரியில் சி.நரசிம்மன், நீலகிரி(தனி) தொகுதியில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், கோவையில் பாஜ தலைவர் அண்ணாமலை, பெரம்பலூரில் ஐஜேக தலைவர் டி.ஆர்.பாரிவேந்தர், திருநெல்வேலியில் சட்டமன்ற பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், கன்னியாகுமரியில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் போட்டியிடுகின்றனர். மீதியுள்ள தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் இன்று வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக பாஜ தலைவர் அண்ணாமலை அளித்த பேட்டி: யாரையும் நெருக்கி பாஜ வளர விரும்பவில்லை. தமிழகத்தில் ஒரு மாற்று அரசியல் வர வேண்டும் என்றால் பல கட்சிகள் இருக்க வேண்டும். பல வண்ணங்கள், பல சின்னங்கள் இருக்க வேண்டும். எல்லா சமுதாயத்தில் இருந்தும் மக்கள் இருக்க வேண்டும். அப்போது தான் மக்களுக்கு நம்பிக்கை வரும். தமாகாவுக்கு 3 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதை அவர்கள் அறிவிப்பார்கள். ஓபிஎஸ் நல்ல முடிவை எடுத்து இருக்கிறார். விரைவில் பத்திரிகையாளர்களை சந்தித்து முடிவை அறிவிப்பார்.

திமுக-அதிமுக-பாஜ அணி களம் காணும் தொகுதிகள்
தொகுதி திமுக அதிமுக பாஜ
தென் சென்னை தமிழச்சி தங்கபாண்டியன் ஜெயவர்தன் தமிழிசை சவுந்தரராஜன்
வேலூர் கதிர் ஆனந்த் பசுபதி ஏ.சி.சண்முகம்
நீலகிரி ஆ.ராசா லோகேஷ் தமிழ்செல்வன் எல்.முருகன்
கோவை கணபதி பி.ராஜ்குமார் சிங்கை ராமச்சந்திரன் அண்ணாமலை
பெரம்பலூர் அருண் நேரு சந்திரமோகன் பாரிவேந்தர்
திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். ஆனால் திமுக கூட்டணியில் காங்கிரசும், அதிமுக கூட்டணியில் தேமுதிகவும், பாஜ கூட்டணியில் பாஜ மற்றும் பாமகவும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இந்த 5 தொகுதிகளுக்கு மட்டுமே 3 அணியிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

You may also like

Leave a Comment

13 − 11 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi