சென்னை: திமுக கூட்டணியில் தமிழ்நாட்டில் 9 தொகுதிகளிலும் புதுச்சேரி தொகுதியிலும் காங்கிரஸ் போட்டியிடுகிறது. வேட்பாளர்கள் தேர்வை கட்சி தலைமை தீவிரப்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் சார்பில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் இருந்து விருப்ப மனுக்களை காங்கிரஸ் பெற்றது. இதுபற்றி மேலிட பொறுப்பாளர்களுடன் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கடந்த 2 நாட்களாக ஆலோசனை நடத்தினார். இதை தொடர்ந்து 9 தொகுதிகளுக்கும் தலா 3 பேர் கொண்ட பெயர் பட்டியலை தயார் செய்து, இந்த பட்டியலுடன் நேற்று முன்தினம் செல்வப்பெருந்தகை டெல்லி சென்றார். அங்கு, அகில இந்திய காங்கிரஸ் மூத்த தலைவர்களை சந்தித்து வேட்பாளர்கள் தேர்வு தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
அதை தொடர்ந்து, காங்கிரஸ் வேட்பாளர்கள் தேர்வு குழுவினரை நேற்று சந்தித்து வேட்பாளர் பட்டியலை இறுதி செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் 9 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் தலைமை வெளியிட உள்ளது. இந்த பட்டியலில், சிட்டிங் எம்பிக்கள் 5 பேருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதேசமயம் கடலூர் தொகுதிக்கான 3 பேர் கொண்ட பட்டியலில் கே.எஸ்.அழகிரி, நாசே ராமச்சந்திரன், விஷ்ணு பிரசாத் ஆகியோர் இருப்பதாக கூறப்படுகிறது.
மயிலாடுதுறை தொகுதிக்கான பட்டியலில் பிரவீன் சக்கரவர்த்தி, மணிசங்கர் அய்யர் மகள், டாக்டர் கலீல் ரகுமான் ஆகியோர் இருப்பதாக கூறப்படுகிறது. திருநெல்வேலி தொகுதிக்கு பீட்டர் அல்போன்ஸ், டாக்டர் பால்ராஜ், ரூபி மனோகரன் ஆகியோர் பெயர் இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோன்று திருவள்ளூர் தொகுதி மீண்டும் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டாலும் சிட்டிங் எம்பியான ஜெயக்குமார் மாற்றப்படலாம் என கூறப்படுகிறது. இதனால் இந்த தொகுதிக்கான 3 பேர் கொண்ட பெயர் பட்டியலில் முன்னாள் எம்பியான விஸ்வநாதன், லெனின் பிரசாத், சசிகாந்த் செந்தில் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.