டெல்லி: காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 2,700 கனஅடி தண்ணீர் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்துள்ளது. காவிரி ஒழுங்காற்று குழுவின் 90-வது கூட்டம் அதன் தலைவர் வினித் குப்தா தலைமையில் காணொலிக் காட்சி மூலம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அதிகாரிகள் பங்கேற்றனர். தமிழக அரசு சார்பில் காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம், தலைமை பொறியாளர் சுப்பிரமணியம் மற்றும் பட்டாபிராமன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். கூட்டத்தில் பேசிய தமிழக அரசு, தற்போது பருவமழை பெய்து வரும் காலகட்டமாக உள்ளது.
கர்நாடகா ஏற்கனவே வினாடிக்கு 2600 கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என சொன்ன அளவை விட அதிகமாகவே திறந்து விட்டிருக்கிறது. 5,000 முதல் 8,000 கனஅடி நீர் வரை கர்நாடகா அரசு திறந்திருக்கிறது. அக்டோபர், நவம்பர் மாதங்களில் திறக்க வேண்டியதை விட அதிகமாக திறந்துவிட்டுள்ளது. ஆனால் பழைய நிலுவை அப்படியே உள்ளது. எனவே தமிழகத்திற்கு 11 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என வலியுறுத்தியிருந்தது. மேலும் மேட்டூர் அணையில் 25 டி.எம்.சி. தண்ணீர் தான் இருப்பு உள்ளது.
கொள்ளளவு 93 டி.எம்.சி. என்பதால் எவ்வளவு தண்ணீரை கர்நாடகா திறந்துவிட்டாலும் அதனை மேட்டூர் அணையில் சேமித்து வைத்துக்கொள்ளலாம் என அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது. தொடர்ந்து இருதரப்பு கருத்துக்களும் கேட்டுக்கொள்ளப்பட்டது. அதற்கு பிறகு காவிரி ஒழுங்காற்று குழு, தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 2,700 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என கர்நாடகாவுக்கு பரிந்துரைத்துள்ளது. நாளை முதல் டிசம்பர் இறுதி வரை தண்ணீர் திறக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நவம்பர், டிசம்பர் மாதங்களில் நிலுவையில் உள்ள தண்ணீரை கர்நாடகா திறந்துவிடவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.