சென்னை: மருத்துவ மாணவர் சேர்க்கையை ஒன்றிய அரசு நடத்துவதற்கு எதிர்ப்பு வலுக்கிறது. ஏற்கனவே ஒன்றிய அரசு வெளியிட்ட அறிவிப்புக்கு எதிர்ப்பு எழுந்த நிலையில் மீண்டும் ஒன்றிய சுகாதாரத்துறை அறிவிப்பால் சர்ச்சையாகியுள்ளது. நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் 100 சதவீத இடங்களுக்கும் ஒன்றிய அரசே கலந்தாய்வு நடத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. ஒன்றிய அரசின் அறிவிப்புக்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஒன்றிய அரசின் அறிவிப்பால் தமிழ்நாட்டில் உள்ஒதுக்கீடு பெறும் மாணவர்களின் மருத்துவ கல்வி வாய்ப்பு பறிபோகும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒன்றிய சுகாதாரத்துறை அதிகாரிகளை நேரில் சந்தித்து விளக்கம் அளிக்க தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் முடிவு செய்துள்ளார்.