தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக சுற்றுலா பயணத்திட்டங்களில் 2024-ம் ஆண்டு ஜனவரி முதல் ஜுலை மாதம் வரை 7 மாதங்களில் 88,008 சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து, சுற்றுலா பயணம்

சென்னை, வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் சுற்றுலா வளாக கூட்டரங்கில், தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகள், அமுதகம் உணவகங்கள், படகு குழாம்கள் குறித்த மேலாளர்கள் மற்றும் மண்டல மேலாளர்களுக்கான ஆய்வுக் கூட்டம் இன்று (7.8.2024) நடைபெற்றது. இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர்.பி.சந்தரமோகன் இ.ஆ.ப., அவர்கள், சுற்றுலா ஆணையர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் திரு.சி.சமயமூர்த்தி.இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் முன்னிலையில் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் ஆய்வு மேற்கொண்டார்.

இக்கூட்டத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் பேசுகையில் தெரிவித்ததாவது:
தமிழ்நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கை அளித்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தை 1971 ஆம் ஆண்டில் உருவாக்கினார்கள். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஓட்டல் தமிழ்நாடு என்ற பெயரிலான தங்கும் விடுதிகள், அமுதகம் என்ற பெயரிலான உணவு விடுதிகள், சுற்றுலாத் பயணத்திட்டங்கள், சுற்றுலா பேருந்து சேவைகள், படகு சேவைகள், தொலைநோக்கி இல்லங்கள் என சுற்றுலா பயணிகளுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்த சுற்றுலாத்துறை முதலமைச்சரின் சீரிய முயற்சிகளால் உணவங்கள், தங்கும் விடுதிகள் ஆகியவை புதுப்பிக்கப்பட்டு, புதுப்பொலிவு பெற்றதன் காரணமாக விரைவான வளர்ச்சியை பெற்று இந்தியாவிலேயே சுற்றுலாத்துறையில் முதன்மை மாநிலமாக விளங்கி வருகின்றது. மேலும் முதலமைச்சர் கடந்த சில மாதங்களில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் 2 புதிய வால்வோ சொகுசு பேருந்துகள், 5 அதிநவீன சொகுசு பேருந்துகள் என 7 புதிய சுற்றுலா பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்கள். இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் அதிக அளவில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சுற்றுலா பயணத்திட்டங்களில் முன்பதிவு செய்து பயணம் மேற்கொண்டு வருகின்றார்கள்.

2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சுற்றுலாத் திட்டங்கள் மூலம் 1,33,767 சுற்றுலா பயணிகள் முன்பதிவு செய்து சுற்றுலா மேற்கொண்ட நிலையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் ஜுலை மாதம் வரை 7 மாதங்களில் 88,008 சுற்றுலா பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர். தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தமிழ்நாடு முழுவதும் 26 ஓட்டல்களை நேரடியாக நிருவகித்து வருகின்றது. இவற்றில் 492 குளிரூட்டப்பட்ட அறைகளும், 188 சாதாரண அறைகளும், மலைப்பகுதி சுற்றுலாத்தளங்களில் 172 அறைகளும் என மொத்தம் 852 அறைகள் உள்ளன. தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் சுற்றுலாத் திட்டங்கள் மற்றும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதிகளில் மூத்த குடிமக்கள், போர் விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தள்ளுபடி சலுகைகள் வழங்கப்படுகின்றன.

சுற்றுலாப் பயணிகளுக்கு நினைவில் நீங்காத அனுபவத்தை தரும் வகையில், சாகச படகு சவாரி மற்றும் நீர் விளையாட்டுகளுடன் கூடிய படகு குழாம்களை முட்டுக்காடு, முதலியார் குப்பம், உதகமண்டலம், பைக்காரா, கொடைக்கானல், ஏற்காடு, பிச்சாவரம், குற்றாலம் மற்றும் வாலாங்குளம் ஏரி உள்ளிட்ட 9 இடங்களில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் படகு குழாம்களை இயக்கி வருகிறது. வாட்டர் ஸ்கூட்டர்கள், மோட்டர் படகுகள், விரைவு படகுகள், மிதிப்படகுகள், துடுப்பு படகுகள், வாட்டர் சைக்கிள்கள், குழந்தைகளுக்கான மிதிப்படகுகள் என மொத்தம் 560 படகுகள் சுற்றுலா பயணிகளுக்கு நீங்காத அனுபவங்களை அளித்து வருகின்றன.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் பயணத் திட்டங்கள் மற்றும் ஓட்டல் தமிழ்நாடு தங்கும் விடுதி அறைகளை முன்பதிவு செய்ய தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் www.ttdconline.com <http://www.ttdconline.com/> என்ற இணைதள பக்கத்தில் தங்களது செல்போன் அல்லது கணினி மூலமாக முன்பதிவு செய்தோ, அல்லது சென்னை வாலாஜா சாலையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் தலைமை அலுவலகமான சுற்றுலா வளாகத்திற்கு நேரில் வருகை தந்தோ முன்பதிவு செய்யலாம்.

மேலும் விவரங்களுக்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக கட்டணமில்லா தொலைபேசி எண் 180042531111 மற்றும் 044-25333333, 044-25333444 ஆகிய தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டும், வலைதள முகவரி www.ttdconline.com <http://www.ttdconline.com/> மூலமாகவும் விவரங்களை பெறலாம் என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக பொதுமேலாளர் ச.கவிதா உள்பட தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

‘அதிமுகவை விட்டு யாரும் போகல’: சொல்கிறார் எடப்பாடி

மாவட்டந்தோறும் முதியோர் இல்லம்: அரசு அமைக்க ஐகோர்ட் கிளை உத்தரவு

தமிழ் வழி சான்று உண்மையா? லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் விசாரிக்க உத்தரவு