முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சிறந்த ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு நாடு முழுவதும் 50 நல்லாசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் தமிழகத்தை சேர்ந்த 2 ஆசிரியர்கள் நல்லாசிரியர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வேலூர் மாவட்டம் ராஜகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் கோபிநாத், மதுரை டி.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முரளிதரன், ஆகியோர் இந்த ஆண்டு நல்லாசிரியர் விருது பெற தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஆசிரியர்கள் பாடம் மட்டும் நடத்தி விட்டுச் செல்லாமல், மாணவர்களுக்கு கவுன்சிலிங் தர வேண்டும். நான் தொடர்ந்து மாணவர்களின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவேன். இந்த விருதினை மாணவர்களுக்காக அர்ப்பணிக்கிறேன் என தேசிய நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர் முரளிதரன் தெரிவித்துள்ளார். அதேபோல், தேசிய அளவில் பெறப்படும் நல்லாசிரியர் விருதினை என்னுடைய மாணவர்களுக்காக அர்ப்பணிக்கிறேன், என ஆசிரியர் கோபிநாத் தெரிவித்துள்ளார்.