தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் வரும் 12ம் தேதி கூடுகிறது: பிப்ரவரி 19ல் பட்ஜெட் தாக்கல் சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

சென்னை: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் வருகிற 12ம் தேதி காலை 10 மணிக்கு கூட இருப்பதாகவும், பிப். 19ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்றும் சபாநாயகர் அப்பாவு அறிவித்தார். சென்னை, தலைமை செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டி: தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தை வருகிற 12ம் தேதி (திங்கள்) காலை 10 மணிக்கு சட்டப்பேரவை மண்டபத்தில் கூட்டி உள்ளார். இந்திய அரசியலமைப்பு சட்டம் விதி 176/1ன் கீழ் அந்த கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்துகிறார். தொடர்ந்து வருகிற 19ம் தேதி, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு 2024-2025க்கான நிதிநிலை (பட்ஜெட்) அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். தொடர்ந்து 20ம் தேதி 2024-25க்கான முன்பண மானிய கோரிக்கையினையும், 21ம் தேதி 2023-24க்கான முன்பண செலவு மானிய கோரிக்கையினையும் தாக்கல் செய்ய உள்ளார். ஆளுநர் உரை மற்றும் பட்ஜெட் உரை மீதான விவாதம் குறித்து அலுவல் ஆய்வு குழு முடிவு எடுத்து அறிவிக்கப்படும். கடந்த ஆண்டு ஆளுநர் உரையின்போது சர்ச்சை ஏற்பட்டது, இந்த ஆண்டு எப்படி இருக்கும் என்று கேட்கிறீர்கள். பேரவை தலைவராலோ, அரசாலோ எந்த சர்ச்சையும் வரவில்லை. இந்த ஆண்டும் நன்றாக கூட்டம் நடக்கும். எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை பற்றி நீதிமன்றம் செல்லப்பட்டுள்ளது. நீதிமன்றம் சட்டப்பேரவையையோ, சட்டப்பேரவை தலைவரையோ கட்டுப்படுத்தாது என்று உங்கள் எல்லோருக்கும் தெரியும். நீதிமன்றம் என்ன தீர்ப்பு வழங்குகிறதோ அது வேறு சமாச்சாரம். ஆனால், சட்டப்பேரவைக்குள் ஒரு உறுப்பினரை எங்கு அமர வைக்க வேண்டும் என்கிற முழு உரிமையும் பேரவை தலைவருக்குத்தான் உண்டு. இதையே முன்னாள் இருந்த சபாநாயகர் தனபாலும் வெளிப்படையாக சொல்லி இருக்கிறார்.

அதை நினைவுபடுத்த வேண்டியதில்லை. எதிர்க்கட்சி தலைவராக இருந்த மறைந்த விஜயகாந்த் தான் சட்டப்பேரவை நிகழ்ச்சியை நேரலை செய்ய வேண்டும் என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அப்போது ஆளுங்கட்சியாக இருந்தது அதிமுக. அவர்கள் பதில் மனுவில், சட்டமன்ற நிகழ்ச்சியை நேரலையாக காண்பிக்க முடியாது என்று எழுதி கொடுத்துள்ளனர். இப்போது, அந்த வழக்கில்தான் அதிமுக சார்பாக வேலுமணி தன்னையும் இணைத்துக்கொண்டு முழுமையாக சட்டமன்ற நிகழ்ச்சியை நேரலையாக ஒளிபரப்ப வேண்டும் என்று சொல்லியுள்ளார். திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு முதல்வர் மு.க.ஸ்டாலின், நேரலையாக, முழுமையாக காண்பிக்க வேண்டும் என்றுதான் இந்த அரசின் முழு கொள்கை, திட்டம். அதை நோக்கிதான் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக கேள்வி-பதில்கள் முழுமையாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. தொடர்ந்து சில முக்கிய கவனஈர்ப்பு தீர்மானங்கள், அரசு தீர்மானங்கள் எல்லாம் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் பல மாநிலங்களில் யாரும் இதுபோன்று காண்பிக்கவில்லை. படிப்படியாக அனைத்து நிகழ்ச்சிகளையும் நேரடியாக ஒளிரப்பும் பணிகளை அரசு செய்து கொண்டிருக்கிறது. 2021 முதல் சட்டப்பேரவையில் நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளையும் ஆன்லைன் மூலமாக பார்க்க நடவடிக்ைக எடுக்கப்பட்டு வருகிறது. மறைந்த முதல்வர் கலைஞர் பேரவையில் பேசியதை கூட அரசு இணையதளத்தில் பார்க்கலாம். எந்த ஒளிவுமறைவும் அரசிடமும் சட்டமன்றத்திடமும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார். துணை சபாநாயகர் பிச்சாண்டி, கொறடா செழியன், பேரவை செயலாளர் சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

 

Related posts

சுற்றுலா பஸ் கவிழ்ந்து 15 மாணவ, மாணவியர் காயம்

ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் அலங்காரம்: சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

கடந்த 25 வருடங்களாக மூன்று வேளையும் ஆயிலை குடித்து உயிர் வாழும் மெக்கானிக்: ஒசூரில் பரபரப்பு