சென்னை : சுய சான்றிதழ் திட்டத்தின் கீழ் கட்டிட அனுமதி பெறுவோர் தவறான தகவலை அளித்தால், குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரித்துள்ளது. தமிழ்நாட்டில் 3,500 சதுர அடி பரப்பில் கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு எளிதில் இணையதளம் மூலம் உடனடி அனுமதி பெரும் வகையில் சுய சான்றிதழ் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதில் விதிமீறல் இருக்கக் கூடாது என்பதற்காக தமிழ்நாடு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளது. இந்த நிலையில், கட்டிட அனுமதி பெற தவறான தகவல் அளிப்போர் மீது குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளில் திருத்தும் செய்து, அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி சட்டவிரோதமாக கட்டிட அனுமதி பெறுவோர் மீது உள்ளாட்சி சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நோட்டீஸ் அளித்து திட்ட அனுமதியை ரத்து செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகாரிகள், கட்டுமான பணிகளை ஆய்வு செய்யும் போது, விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமையாளர்கள் அதனை சரி செய்ய வேண்டும் இல்லாவிட்டால் கட்டிடத்தை அப்புறப்படுத்தும் நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்வார்கள் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.